close
Choose your channels

ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரலாமா? 'மாநாடு' சர்ச்சை குறித்து பாரதிராஜா கேள்வி!

Monday, December 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் விவகாரம் குறித்து சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் நீதிமன்றம் சென்றார் என்பதும் இதுகுறித்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஜாமீன் கையெழுத்து போட வந்தவர் சொத்துக்கு உரிமை கோரலாமா? என கேள்வி எழுப்பி பாரதிராஜா அவர்கள் டி ராஜேந்தருக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தங்கள் மகன் சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் சம்பந்தமாகத் தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பலமுறை தலையிட்டுப் படம் சுமுகமாக வெளியாக உதவியது தாங்கள் அறிந்ததே.

படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று சிலம்பரசனின் வியாபாரமும், அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்தத் திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

'மாநாடு' வெளியீட்டுக்கு முந்தைய நாள் மொத்தத் திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்குச் சான்று.

படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வரத் தாமதமானாலும் பரவாயில்லை, படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முனவந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனைத் திருப்பித் தருகிறார்.

ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துகளுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?

ஒரு அமைப்பில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயன்றது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?

இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்குத் தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்? வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்குப் போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கி இருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது''.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.