இரண்டே வாரத்தில் டேமேஜ் ஆன சென்னை மால் திரையரங்குகள்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே திரையரங்குகளும் மூடப்பட்டன என்பதும் கடந்த 15 நாட்களுக்கும் மேல் திரையரங்குகள் செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள மால் ஒன்றில் உள்ள திரையரங்குகள் இரண்டு வாரங்களுக்கும் மேல் மூடப்பட்டுள்ளதால் திரையரங்குகள் நிலைமை எப்படி உள்ளது என்று பார்ப்பதற்காக அரசின் அனுமதியை பெற்று சமீபத்தில் திரையரங்கு நிர்வாகிகள் திறந்து பார்த்தனர். அப்போது திரையரங்க நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

திரையரங்கில் உள்ள சீட்டுக்கள் அனைத்தையும் எலிகள் கடித்து துவம்சம் செய்துள்ளதாகவும், திரைச்சீலையும் படுமோசமாக டேமேஜ் ஆனதையும் பார்த்து திரையரங்கு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த திரையரங்கு உரிமையாளர் மற்ற மால் திரையரங்கு உரிமையாளர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரவர் திரையரங்கை சோதனை செய்யுமாறு கூறி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்ட அனுமதி கிடைத்தாலும் டேமேஜ் ஆன திரையரங்குகள் சரி செய்யப்பட்டு திரைப்படங்கள் திரையிட கூடுதல் நாட்கள் ஆகும் என்று கூறப்படுவதால் திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.