close
Choose your channels

விவசாயிகளின் இறப்புக்கு அமைச்சரின் மகன் காரணமா? உ.பி.யில் வெடிக்கும் சர்ச்சை!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நேற்று விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு இடையே அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த வாகனம் ஒன்று விவசாயிகள் நின்றிருந்த கூட்டத்திற்கு இடையே புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ரா ஓட்டிவந்த காரே காரணம் என்று அவர்மீது முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

லக்கிம்பூர் மாவட்டத்தில் அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் மவுரியா ஏற்பாடு செய்திருந்த ஒரு அரசு விழாவிற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வருகை தந்திருந்தார். இவர்கள் விழாவிற்கு சென்ற வழியில் கார்களை மறித்து வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சருக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த கார் ஒன்று திடீரென்று விவசாயிகளின் கூட்டத்திற்கு இடையே புகுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட விபத்தில் 4 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பாஜக தொண்டர்கள் 2 பேர் உட்பட மற்ற 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இதைத்தவிர 15 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கார் மோதி படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்துக் குறித்து சம்யுக்த் கிசான் மோக்சா அமைப்பு, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராதான் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்தார். இதனால் விவசாயிகள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர் என லக்கிம்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா, “என் மகன் சம்பவ இடத்திலேயே இல்லை. துணை முதல்வர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் இருந்தார். நானும் அங்குதான் இருந்தேன். சம்பவ இடத்தில் என் மகன் இல்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது“ என விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தையடுத்து நேற்று லக்கிம்பூரில் பெரும் வன்முறையே வெடித்தது. இந்நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விடாமல் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவர்களுடன் நேற்று இரவு முழுவதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு மாநில அரசு இழப்பீட்டு தொகையை அறிவித்து இருக்கிறது.

அதாவது உயிரிழந்த ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்திற்கும் தலா ரூ.45 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசாங்க வேலை என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் லக்கிம்பூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.