ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கர்நாடக மந்திரி… நிவாரணப் பணிகளின்போது பரபரப்பு சம்பவம்!!!
- IndiaGlitz, [Wednesday,August 12 2020]
கர்நாடகத்தின் உடுப்பி, தட்சிண கன்னடா, உத்திர கன்னடா போன்ற மாவட்டங்களில் தற்போது கடுமையான மழை பெய்துவருகிறது. தென்மேற்கு பருவமழை வலுவடைந்து இருப்பதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உடுப்பி மாவட்டத்தின் பொறுப்பு மந்திரி மற்றும் மாநில போலீஸ் மந்திரியுமான பசவராஜ் பொம்மை தனது பொறுப்பில் உள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு உடுப்பி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். உடுப்பியில் ஆய்வுகளை செய்துவிட்டு அருகே உள்ள காபு வட்டத்தின் படுபத்ரி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தை அளவிடுவதற்காக கடற்கரைக்கு சென்றிருக்கிறார்.
அரபிக்கடலை ஒட்டிய படுபத்ரியில் கனமழை காரணமாக ராட்சத அலைகள் ஏற்பட்டு இருக்கிறது. அலைகளில் விளையாட நினைத்த பசவராஜ் பொம்மை சிறிது நேரம் கடல் சீற்றத்தைப் பொருட்படுத்தாது குழந்தை போல விளையாடி இருக்கிறார். மேலும் உடுப்பி மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் மற்றும் பா.ஜ.க பிரமுகர் ஒருவரும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அரபிக்கடலில் எழுந்த ராட்சத அலை திடீரென்று பசவராஜ் பொம்மையை அலேக்காகக் கடலுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது. உடனே சுதாரித்துக் கொண்ட விஷ்ணுவர்தன் மற்றும் பா.ஜ.க பிரமுகர் இருவரும் சேர்ந்து மந்திரியை பிடித்து இழுத்து அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றியிருக்கின்றனர்.
இந்நிகழ்வு கர்நாடகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஷ் சூப்பிரண்டு சிறிது தாமத்தித்து இருந்தாலும் நிலைமை மோசமாகியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பசவராஜ் பொம்மை கடல் அலையில் விளையாடி அடித்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.