close
Choose your channels

நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்போ ஹார்ன் அடி..! ஒலி மாசை குறைக்க மும்பை காவல்துறை செய்த முயற்சி.

Saturday, February 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்போ ஹார்ன் அடி..! ஒலி மாசை குறைக்க மும்பை காவல்துறை செய்த முயற்சி.

இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது. அனைத்து நகரங்களிலும் நிலவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு இணையாக ஒலி மாசுபாடும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கையின்படி இந்தியாவிலேயே மும்பையில்தான் அதிக ஒலி மாசுபாடு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய தற்போது அம்மாநில போலீஸார் நூதனமான வழியைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இந்தியா முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ண சிக்னல்களோடு சேர்த்து விநாடிகள் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.

 

அதில், 90 விநாடிகள் மட்டும் ஒருவர் சிக்னலில் நின்றால் போதும். 90 விநாடிகள் முடிந்த பிறகு தானாக நிறங்கள் மாறிவிடும். இதனால் ஒலி மாசு எப்படி வருகிறது என யோசிக்கலாம், சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் 90 விநாடிகள் முடியும் சில விநாடிகளுக்கு முன்பே ஹார்ன் அடித்து தனக்கு முன்னால் இருப்பவர்களை நகரும்படி எச்சரிக்கை செய்வார்கள். இதன் காரணமாகவே அதிக ஒலி மாசு ஏற்படுவதாக நினைத்த காவலர்கள் டெசிபல் மீட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.

டெசிபல் மீட்டர் என்பது ஒலி அளவைக் கணக்கிடும் கருவி, இதை சிக்னலுடன் இணைத்து வைத்துள்ளனர் காவலர்கள். சிக்னலில் 90 விநாடிகள் ஓடும்போது டெசிபல் மீட்டரும் தன்னைச் சுற்றியிருக்கும் ஒலி மாசைக் கணக்கிடும். அளவுக்கு அதிகமான ஒலி மாசு ஏற்பட்டால் குறைந்துகொண்டு வந்த சிக்னல் விநாடிகள் மீண்டும் முதலிலிருந்து தொடங்கும். அதாவது, அனைத்துப் பயணிகளும் இன்னும் 90 விநாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டிய நிலை வரும். இதன் காரணமாக தற்போது யாரும் ஹார்ன் அடிப்பதில்லை. ஹார்ன் அடித்தால் காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற டிஜிட்டல் பதாகைகளும் அவ்வப்போது தோன்றுகின்றன.

சிக்னலில் காத்திருக்க விரும்பாதவர்கள் பிறரையும் ஹார்ன் அடிக்க விடுவதில்லை. இதுதொடர்பான விழிப்புணர்வு வீடியோவையும் மும்பை போலீஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது நேற்று முதல் வைரலாகி வருகிறது.அதில், `காத்திருப்பதற்கு உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால் தயங்காமல் ஹார்ன் அடியுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை போலீஸின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.