close
Choose your channels

பொள்ளாச்சி பாலியல் வழக்கு....! கூடிய சீக்கிரம் வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....!

Wednesday, August 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொள்ளாச்சி பாலியல் வழக்கை தினமும் விசாரித்து, 6 மாதங்களுக்குள் இதை முடிக்க வேண்டும் என, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கு தான் கடந்த 2019-இல் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமில்லாமல், அப்பாவி பெண்களை ஆபாசமாக படமெடுத்து துன்படுத்திய குற்றத்திற்காக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த், மணிவண்ணன் உள்ளிட்ட கொடூரர்கள், கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஒருசிலருக்கு இதில் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்பின் இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்குப்பின், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரியில் பொள்ளாச்சி நகர அஇஅதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், பாபு உள்ளிட்டோரை, இவ்வழக்கில் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கைது செய்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதிமுக கட்சி அருளானந்தத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.

கொரோனா சமயத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், சிறையில் இருந்தவாறே வீடியோ கான்பரசிங் வழியாக நீதிமன்றத்தின் முன்பு இவர்கள் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் அருளானந்தம் ஜாமீன் வேண்டும் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவனுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. காரணம் 8 பெண்கள் அளிக்கப்பட புகாரின்பேரில் விசாரணை நடைபெற்று வருவதால், குற்றவாளி வெளியே வந்தால் சாட்சியங்கள் கலைக்கக்கூடும் என சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது

இதனால் ஜாமீன் கோரி அருளானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தான்.
இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி தலைமையில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், இந்த வழக்கு தாமதமாக நடைபெறுவதாக சிபிஐ சார்பில் கூறப்பட்டது. இவ்வழக்கை கூடிய விரைவில் முடிக்க, தமிழக காவல்துறை ஒத்துழைப்பு கொடுக்கும் என காவல் அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதி தண்டபாணி அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கை இனி வரும் நாட்களில், ஒவ்வொரு நாளும் விசாரித்து, 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி அவர்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாராக இருந்தாலும், தைரியமாக முன்வந்து புகார் கொடுக்கலாம் என காவல்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.