close
Choose your channels

2020 இல் உலகை விட்டு பிரிந்த சில தமிழ் சினிமா பிரபலங்கள்…  

Thursday, December 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2020 இல் உலகை விட்டு பிரிந்த சில தமிழ் சினிமா பிரபலங்கள்…  

 

2020 இல் கொரோனா பரவல் மக்களை வாட்டி எடுத்ததோடு வேறு சில நிகழ்வுகளும் மக்களை வெகுவாகப் பாதிக்கச் செய்தன. மேலும். இந்த ஆண்டு முழுவதும் மருத்துவம் மற்றும் காவல் துறையினருக்கு அதிக சிரமமான ஆண்டாக இருந்திருக்கும். அந்த வகையில் சினிமா துறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கடந்த மார்ச் மாதம் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் இன்றுவரை திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் ஈடுபட்ட முடியாத வகையிலேயே அமைந்து இருந்தன. அதைவிட இந்த ஆண்டில் பல சினிமா பிரபலங்களின் தற்கொலைகளும் இயற்கை மரணங்களும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பிரபலங்களின் தொகுப்பு.

 நடிகர் சேது- தமிழ் சினிமாவில் இளம் வயது நடிகராக இருந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதோடு இவர் தோல் சிகிச்சை மருத்துவராக இருந்தார் என்பதுதான் மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பின்பும் சில முக்கியக் கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். 36 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இயக்குநர் விசு-பழம்பெரும் இயக்குநரான விசு மரணம் தமிழ் சினிமாத்துறையில்  பெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட இவர் சிறுநீரக கோளாறு காணரமாக அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 75 வயதில் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார்.

பாடகர் எஸ்பிபி- தமிழ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தென் இந்திய இசைத் துறைக்கும் இவரின் இழப்பு ஈடுகட்ட முடியாதது என்றே சொல்லலாம். பழம்பெரும் பாடகரான இவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் 50 நாட்களை கடந்தும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடலில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தனது 75 ஆவது வயதில் உயிரிழந்தார்.

காமெடியன் வடிவேல் பாலாஜி-சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகர் வடிவேல் பாலாஜி. “அது இது எது” “கலக்கப்போவது யாரு” போன்ற ஷோக்களில் முன்னணி காமெடியனாக இருந்த இவர் சில திரைப்படங்களிலும் தலைக்காட்டினார். மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்பு 2 கைகளும் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி உயிரிழந்தார்.

நடிகர் தவசி- பெரிய மீசை மற்றும் தாடி வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், ரஜினி முருகன் ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்து இருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் கூறிய “கருப்பன் குசும்புக்காரன்” என்ற டயலாக்கின் மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தபோது பல சினிமா நட்சத்திரங்கள் உதவ முன்வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் 23 ஆம் தேதி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரவை முனியம்மா- நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தன்னுடைய இயல்பான பேச்சு வழக்கு மூலமாக தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஜோதிகா நடிப்பில் உருவான தூள் படத்தில் பட்டையைக் கிளப்பிய இவர் அடுத்து சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். மேலும் தமிழக அரசு இவரது கலைச் சேவையை பாராட்டி கலைமாமணி விருதையும் வழங்கி இருக்கிறது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட இவரும் கடைசி காலத்தில் வறுமையோடு கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார்.

அருண் அலெக்சாண்டர்- மிகச் சிறந்த டப்பிங் கலைஞரான இவர் ஹாலிவுட், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்த முக்கிய நடிகர்களின் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்து இருக்கிறார். அதோடு தமிழ் திரைப்படங்களிலும் இவர் குணச்சித்திர வேடங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி, மாஸ்டர், அண்ணாத்தா போன்ற படங்களில் நடித்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு 48 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை நடிகை சித்ரா- இதுவரை கூறிய அனைத்து இழப்புகளும் தற்செயலாகவோ அல்லது உடல்நலக் குறைவு காரமாகவோ இருக்க நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் வரும் பாண்டியன் ஸ்டோர் நாடகத்தின் மூலம் பிரபலமான இவர் முன்னதாக விஜேவாக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவரது தற்கொலையில் இன்னும் மர்மம் நீடித்து வருவதாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தப் பிரபலங்களைத் தவிர, ஹிந்தியில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த சினிமா துறையையே புரட்டிப் போட்டது. அதேபோல பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், கன்னடத்தின் இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மலையாள இயக்குநர் சாச்சி, ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் போன்றவர்களின் மரணமும் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தின.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.