close
Choose your channels

ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் சரவணா செல்வரத்னம் கடைக்கு சீல் வைப்பு

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
நெல்லையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் புதியதாக திறக்கப்பட்ட சரவணா செல்வரத்னம் ஸ்டோர் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து அதன் தரைத்தளத்தை உடனடியாக மூடி சீல் வைக்கும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கட்டிடத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக கட்டடத்தின் முகப்பை மறைப்பதால் சாலையில் நிழல் தரும் பெரிய மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டியது, இந்தக் கடைக்காக அந்த இடத்தில் பஸ் நிறுத்தம் ஏற்பாடு செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடமும், காவல்துறையினர்களிடமும் நெல்லையை சேர்ந்த சரத் இனிகோ என்பவர் புகார் செய்தார். ஆனால் அவரது புகார் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆதாரங்களுடன் சரத் இனிமோ வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், 'நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் செயல்பட்டுவருகிறது. அந்தக் கட்டடம் எந்தவித பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அதில், நிரந்தர மின் இணைப்பு பெறப்படவில்லை. கழிவுநீர் செல்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழுமையாக கட்டடப் பணிகள் முடிவடையாத நிலையில், டிசம்பர் 23-ம் தேதி அவசர கதியில் இந்த வணிக வளாகம் திறக்கப்பட்டது.
இந்த வணிக வளாகத்தால் தெற்குப் புறவழிச் சாலையில் உள்ள குடியிருப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வாகனங்களை பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் நிறுத்துவதால் சிரமம் ஏற்படுகிறது. சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தக் கட்டடத்தில், விபத்துக் காலத்தில் வெளியேற அவசர வாயில் வசதி செய்யப்படவில்லை. தரைத் தளத்தில் கார் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டதாகச் சொல்லிவிட்டு,அங்கு நகைக்கடை நடத்துகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்`` எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், 'கார் பார்க்கிங் செய்யவேண்டிய தரைத் தளத்தில் நடத்தப்படும் நகைகடையை உடனடியாக மூடி சீல் வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதோடு, கட்டடத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது குறித்த ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, மதியம் 2.30 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீதிபதியின் உத்தரவை அடுத்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் 'சரவணா செல்வரத்தினம் கடையின் தரைத்தளத்தை சீல் வைக்க உத்தரவிட்டார். இதன்படி நகைக்கடையில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.