close
Choose your channels

கொரோனாவால் அனாதையாகும் குழந்தைகள்… உறவினர்களும் ஒதுக்கும் நிலை? எங்கே போனது மனிதம்?

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டெசிவிர் மருந்து இல்லை இப்படி எத்தனையோ இக்கட்டான நிலைமையை இந்தியா சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் தங்களது தாய், தந்தைகளை இழந்து தவிக்கும் சிறு குழந்தைகளின் நிலை படு பயங்கரமாகவே இருக்கிறது.

அதாவது கொரோனா பாதிப்பினால் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் இறந்து விட்டால் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் நிலை? என்ன என்பதுதான் தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அதுவும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகளின் நிலை? ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டால் அவர்களது உறவினர்களும் குழந்தைகளை வெறுத்து ஒதுக்குவது இந்தியா முழுக்கவே தற்போது இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. காரணம் கொரோனா மீது இருக்கும் பயத்தினால் மனிதத்தை மீறியும் அந்த குழந்தைகளை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இப்படி அனாதையாகும் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களை யார் பராமரிப்பது என்ற கேள்வியையும் தற்போது சமூகநல ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனால் அரசாங்கம் இதுபோன்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அல்லது தத்து எடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்பது போன்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இப்படி தத்து எடுக்கும் முறையிலும் சில சமூக விரோதிகள் நுழைந்து குழந்தைகளை துன்புறுத்திவிட்டால்? பாலியல் ரீதியாக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கிவிட்டால்? இதுபோன்ற எண்ணற்ற பயமும் முளைத்து இருக்கின்றன.

கொல்கத்தாவில் ஒரு பிஞ்சு குழந்தை கொரோனா பாதிப்பினால் தனது தாய், தந்தை, தாத்தா, பாட்டி என ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் இழந்து இருக்கிறது. அதோடு குழந்தைக்கும் கொரோனா பாசிடிவ் வந்து தற்போது அதில் இருந்து மீண்டு வந்து இருக்கிறது. ஆனால் இன்னும் சிக்கல் முடியவில்லை. காரணம் அந்தக் குழந்தையை யார் எடுத்துச் செல்வது என்பதுதான். உறவினர்கள் யாரும் ஆதரவளிக்க தயாராக இல்லை. இதனால் காவல் துறையினர் வலியுறுத்துதலின்பேரில் தாய் வழி பாட்டனும் பாட்டியும் அந்தக் குழந்தையை தயக்கத்தோடு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதேபோல கர்நாடகாவில் கொரோனா பாதிப்பினால் தாய் மற்றும் தந்தையை இழந்த 2 குழந்தைகளின் நிலை கேள்விகுறியாக மாறியிருக்கிறது. டெல்லியில் இதேபோன்று பெற்றோரை இழந்த குழந்தைகள் தற்கொலைக்கு முயன்ற அவலமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுக்கவே இப்படி கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகத் தவிக்கும் குழந்தைகளின் உடல் நலமும் மனநலமும் என்னவாகும் என்பது பெருத்த சந்தேகமாக மாறியிருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் மனிதமும் காணாமல் போய்விட்ட சூழலையும் பார்க்க முடிகிறது.

கொரோனா எனும் பேரக்கன் உலகம் முழுவதும் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி என அனைத்துக் கட்டுமானத்தை சீர்குலைத்து இருக்கிறது. கடைசியில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கக்கூடிய பாதுகாப்பையும் கெடுத்து இருக்கிறது. அதோடு மனிதம் என்ற மகத்துவத்தையும் இது பாழாக்கி இருக்கிறது. மனிதத்தைப் பாழ்படுத்தி இருக்கும் கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வரவேண்டும். அனாதையாகும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.