close
Choose your channels

மனோவை கொண்டாடிய சிறப்பு விருந்தினர்கள், சூப்பர் சிங்கரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணம் !!

Wednesday, March 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மக்களிடையே மிகப்பிரபலமான நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருட திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில், மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது.

இந்தியத் திரை இசையுலகில் 40 வருடங்களை கடந்திருக்கும் பாடகர் மனோ, இதுவரையிலும் 35000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி பாடகர்கள் என அனைத்து பிரபலமான கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். 3000க்கும் மேற்பட்ட நேரடி மேடை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் கலந்து கொண்டு, பல அறிமுக பாடகர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

பாடகர் மனோவின் 40 வருட திரை இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், சூப்பர் சிங்கர் சீனியரில் பாடகர் மனோ சிறப்புச் சுற்று நடைபெற்றது. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், மனோவின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடி அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மனோவை கௌரவிக்கும் விதமாக, அவருக்காகவே இசை துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உண்ணிமேனன், கல்பனா முதல், பல இசை மேதைகள் கலந்து கொண்டனர். மேலும் ஒரு சிறப்பாக இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாக கலந்து கொள்ளாத, திரை ஆளுமை மனோவின் நண்பர், நடிகர் திரு.வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மனோவின் பாடல்களை கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள், சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்புச் சங்கீத நிகழ்வை அரங்கேற்றினார்கள்.

இந்நிகழ்வில் மனோவின் குடும்பத்திலிருந்து அவரது மகன், மனைவி உட்பட குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்க முடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்கு தனது கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.

கடந்த வார நிகழ்ச்சியின் முழு நிகழ்வின் ஒவ்வொரு நொடியுமே, பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்தது. இது பார்வையாளர்களை மட்டுமல்லாது பங்கேற்பாளர்களையும் நெகிழ வைத்த நிகழ்ச்சியாக அமைந்தது.

தமிழ் இசை உலகில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஒவ்வொரு வாரமும் பெரும் கொண்டாட்டத்துடன், பல நெகிழ்வான தருணங்களுடனும் அரங்கேறி வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஆரம்பம் முதலே, வெகு உற்சாகத்துடன் களை கட்டி வருகிறது. இந்த சீசனில், பலதரப்பட்ட பின்னணியிலிருந்து தனித்துவமான பல பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

கானா பாடகர் சேட்டுவின் குழந்தைக்கு பெயர் வைத்தது, தன்னை பார்க்க ஆசைப்பட்ட பாடகி தன்ஷிராவை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தது, நிகழ்ச்சி முடியும் முன்னதாகவே போட்டியாளருக்கு, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சினிமா வாய்ப்பை வழங்கியது, என ஒவ்வொரு வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, கொண்டாட்டங்களால், களைகட்டி வருகிறது. ஒவ்வொரு பாடகர்களும், தங்களது திறமையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்கள்.

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடையாக திகழும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, பல அற்புத தருணங்களுடன், நெகிழ்வான நிகழ்வுகளும் நிறைந்ததாக இந்நிகழ்ச்சி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.