close
Choose your channels

விலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு

Monday, January 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு

 

மனிதர்களின் வாழ்க்கை இயற்கை சூழலிலிருந்து தொடங்கியது எனலாம். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்த மனிதன் காடு, விலங்குகள், சுற்றுச் சூழல் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவனாகவே இருக்கிறான். அந்த வகையில் சில காட்டு விலங்குகளை மனிதர்கள் தங்களின் உணவுக்காகவும் வேலைகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். மேலும் சிலவற்றை வளர்ப்பு விலங்குகளாகத் தங்களுடன் வைத்துக் கொள்கின்றனர்.  

விலங்குகள் பல நேரங்களில் மனிதர்களுக்கு உதவியாக இருந்தாலும் வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளைப் பரப்பி ஆபத்தினை ஏற்படுத்தவும் செய்கிறது. சமீபத்தில் வருகின்ற பெரும்பாலான நோய்கள் வைரஸ் கிருமிகளால் தோன்றுகின்றன.  குறைந்தபட்சம் 60% நோய்கள் விலங்குகளின் நோய்க் கிருமிகளால் உண்டாகிறது. வைரஸ் கிருமியானது உயிரற்ற ஒரு பொருள்தான். ஆனால் உயிருள்ள விலங்கு அல்லது மனிதர் உயிர்களிடம் புகுந்து விட்ட பின்பு அது பல்கி பெருகிவிடுகிறது.

21 ஆம் நூற்றாண்டில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களிடம் பரவும் வைரஸ் பற்றிய தெளிவினை மருத்துவ உலகம் கண்டு கொண்டது. உலகம் முழுக்க நூற்றுக் கணக்கான வைரஸ்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான வைரஸ்கள் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை மனிதர்களிடம் உண்டாக்குகிறது.

1885 ஆம் ஆண்டு ஜுலை 6 ஆம் நாள் வெறி நாய் கடிக்கப் பட்ட சிறுவனுக்கு முதன் முறையாக ரேபீஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து செலுத்தப் பட்டது. எனவே ஜுலை 6 ஆம் தேதி விலங்கு மற்றும் மனிதர்களிடையே பரவும் நோயைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.  

பரவும் விதம்

கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், விலங்குகள் போன்றவற்றில் இருந்து வைரஸ் கிருமிகள் நேரடியாகவோ அல்லது நோயுற்ற விலங்குகளிடம் இருந்தோ பரவுகிறது. விலங்கு சாப்பிட்ட உணவைச் சாப்பிடுதல், விலங்குகளின் பொருட்களைக் கையாளுதல், விலங்குகள் கடித்தல், சிராய்ப்பு, புண் ஏற்பட்டு அதன் நீர் மனிதர்களின் மீது படுதல், விலங்குகள் குடித்த மாசுபட்ட நீரை அருந்துதல், நன்றாக வேக வைக்காத இறைச்சியை உண்ணுதல், சுத்தப் படுத்தப் படாத பால் பொருட்களை அப்படியே உட்கொள்ளுதல் போன்றவற்றினால் இந்த வைரஸ் கிருமிகள் பொதுவாகப் பரவுகிறது.

சில வைரஸ்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நேரடியாகப் பரவும் தன்மை கொண்டது. வைரஸ் பரவும் விதத்தைக் பொதுவாக 3 வகையாகப் பிரிக்க முடியும்.  

எண்டமிக் – எப்போது வேண்டுமானாலும் திடீரென்று பரவும் வைரஸ் கிருமிகளை இந்த வகைக்குள் அடக்க முடியும். மலேரியா, அம்மை போன்ற வைரஸ் கிருமியினால் ஏற்படுகின்ற நோய்கள் பரவலாக தோன்றி பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது.

எபிடமிக் – ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய வைரஸை இந்த வகைக்குள் அடக்க முடியும். மழைக்காலத்தில் அதிகளவு பரவக்கூடிய வைரஸ் பின்பு காணாமல் போய்விடும் தன்மை கொண்டது ஆகும்.

பாண்டமிக் – ஒரே நேரத்தில் உலகம் முழுக்க பரவும் தன்மை கொண்ட வைரஸ்களை இந்த வகைக்குள் அடக்கலாம். உலகம் முழுக்க பரவும் என்பதால் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இதன் தாக்கம் இருக்கும். சில நேரங்களில் ஒரு நாட்டில் தோன்றிய வைரஸ்கள் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

வைரஸ்களும் பரப்பிய விலங்குகளும்

 

Hiv AIDS 1920- குரங்கு

எபோலா (Ebola) 1976 – குரங்கு

பறவை காய்ச்சல் (Bird Flu) 1993 – Water Bowl

பன்றிக்காய்ச்சல் (Swine Flu) 1919 – பன்றி

நிபா வைரஸ் (Niba) 1998 – வௌவால்கள்

சார்ஸ் (SARS) 2002 – புனுகு பூனை

மெர்ஸ் (MERS) 2012 - ஒட்டகம்

கோரோனா (CORONA) 2020 – ஏதோ ஒரு வகை விலங்கு (இன்னும் உறுதி செய்யப் படவில்லை)

 ஹெச்ஐவி (HiV AIDS)

டெட்ரோ வைரஸ் மனிதனது உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைத்து விடுகிறது.. நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமல் உடல் எல்லாவிதமான நோய்த் தாக்குதலுக்கும் ஆளாகிறது. இந்த வைரஸ் தொற்று மனிதனுக்கு நேரடியாகப் பரவும் தன்மை கொண்டது ஆகும். இரத்தம், விந்து நீர், தாய்ப்பால் போன்ற வற்றில் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது.  டெட்ரோ வைரஸ், குரங்கு இனத்திலிருந்து பரவியதாக விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ளது

எச்.ஐ.வி. என்பது அடிப்படையில் மனிதனது நோய் எதிர்ப்பு சக்தியினை அழிக்கும் நோயாகும். இது மிகவும் வேகமாக பாதிப்பினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது ஆகும். இந்த வைரஸ் பரவிய ஆரம்ப நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டால் இதன் தீவிரத் தன்மை தடுக்கப்படும் என்றாலும் இதைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல், உலகம் முழுவதிலும் இதன் பாதிப்புகள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரை உலகில் இந்த வைரஸால் சுமார் 25 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இந்த நோய் தொற்று உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 0.6% மக்களுக்கு காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இந்த வைரஸின் தாக்கம் மிகவும் அதிகம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எபோலா வைரஸ் (Ebola Virus)

மனித குரங்குகள், பழந்தின்னி வௌவால்களிடம் இருந்து எபோலா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் தாக்கம் பெற்ற ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டது ஆகும்.

1976 ஆம் ஆண்டு தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் எபோலா வைரஸ் தொற்று கண்டறியப் பட்டது. காங்கோ குடியரசில் ஒரு நதியையொட்டிய கிராம பகுதியில் இந்த வைரஸ் தோன்றியதால் எபோலா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த வைரஸ் பின்னாளில் லைபீரியா, கினியா, சியாரா (2013 – 2016) போன்ற பகுதிகளில் பரவி சுமார் 12 ஆயிரம் மக்களைக் கொன்று குவித்தது. 2019 ஆம் ஆண்டு மத்திய ஆப்பிரிக்காவில் மீண்டும் பரவிய எபோலா வைரஸ் 1,800 பேரைக் கொன்றது.

உலகச் சுகாதார அமைப்பு இந்த எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலங்கட்டத்தில் உலக நெருக்கடி நிலையை அறிவித்திருந்தது. திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி, தொண்டை வலி போன்றவை எபோலா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாகும். எபோலா வைரஸ் தொற்றினால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு இதுவரை முழுமையான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

பறவை காய்ச்சல் (Bird Flu) 1993 – Water Bowl

பறவைக் காய்ச்சல் வைரஸ் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டில் வியட்நாமில் கண்டுபிடிக்கப் பட்டது.  கம்போடியா, வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் 2003 முதல் 2006 வரை மொத்தம் 151 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டு 151 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலில் இந்த வைரஸ் பறவைகளைத் தான் தாக்கி வந்தன. பின்பு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவியது. கோழிப் பண்ணைகளில் இருந்து இந்த வைரஸ் பரவியது. பறவைகளில் உள்ள வைரஸ்கள் அவற்றின் கழிவுகள், எச்சில், மூக்கிலிருந்து வடியும் நீர் போன்றவை மனிதர்களிடம் பரவி இந்த நோய் தொற்றினை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸால் பாதிக்கப் படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, சளி, தொண்டை வறட்சி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

பன்றிக்காய்ச்சல் (Swine Flu)

அடினோ, ரைனோ என்ற வைரஸில் இருந்து இன்ஃப்ளூயன்ஸா என்ற வைரஸ் தொற்று தோன்றுகிறது. பெரும்பாலும் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்த வைரஸ் தொற்று பரவி பின்பு காணாமல் போகும் இயல்பை உடையது. 1976 இல் அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப் பட்டது. பின்பு 2007 பிலிப்பைன்ஸில் இந்த வைரஸ் பெரும் பாதிப்பினை உண்டாக்கியது. அமெரிக்கா, மெக்சிகோவில் இதுவரை 149 பேர் இறந்துள்ளனர். பிரேசில், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதுவரை                          30,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த வைரஸ் பரவியதால் 959 பேர் பாதிக்கப்பட்டனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பன்றிகளுக்குள் பரவ வேண்டிய வைரஸ்கள் சில நேரங்களில் மனிதனுக்கும் பரவ தொடங்குகிறது. அதனால் இது பன்றி காய்ச்சல் என அழைக்கப் படுகிறது. இந்த வைரஸ் தொற்றுகள் கடுமையான காய்ச்சலையும், சளி, தலைவலி, உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை உண்டாக்குகின்றன.

ஜிகா வைரஸ் (Zika virus)

பகல் நேரத்தில் கடிக்கக் கூடிய ஒரு வகை கொசுவினால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. ஜிகா வைரஸால் 1947 இல் உகாண்டாவில் குரங்குகள் பாதிக்கப் பட்டன. பின்னர் 1952 இல் இந்த நோய் தொற்று மனிதர்களுக்குப் பரவியது. 2015 இல் பிரேசிலில் ஜிகா வைரஸ் தொற்று அதிகப் பாதிப்பினை ஏற்படுத்தியது. 86 நாடுகளில் இந்த ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த ஜிகா வைரஸை ஏற்படுத்தும் கொசு தான் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

காய்ச்சல், தசை பிடிப்பு, மூட்டு வலி, தலைவலி போன்றவை ஜிகா வைரஸின் அறிகுறிகளாகும்.

நிபா வைரஸ் (Niba virus)

பழந்தின்னி வௌவால்களால் பரவிய நிபா வைரஸ் கொடுமையான வைரஸ் தொற்றை பரப்புகிறது. 1998 முதன் முதலில் மலேசியாவில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வைரஸ் தொற்று வௌவால்களில் இருந்து பன்றிகளுக்குப் பரவியது. நிபா வைரஸ் தொற்று கடுமையான சுவாசப் பிரச்சனையை வரவழைக்கிறது.

2018 இல் கேரளாவில் பரவிய நிபா வைரஸ் 17 பேரை கொன்றது. கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் இந்த வைரஸ் தொற்று மிகவும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படுகின்ற நோய்களுக்கு எந்த நேரடியான மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனா  – சார்ஸ் வைரஸ் (Korena Virus)

கொரோனா வகையைச் சார்ந்த சார்ஸ் வைரஸ் சீனாவில் குவாங்டங் மாகாணத்தில் இருந்து பரவியது.  2002 இல் இந்த வைரஸ் அறிகுறியை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். உலகச் சுகாதார அமைப்பு இந்த வைரஸ் தாக்கத்தினை குறித்து மிகவும் அச்சுறுத்தும் தன்மை கொண்டது என அறிவித்தது. 26 நாடுகளில் இந்த சார்ஸ் வைரஸ் 8,000 க்கும் மேற்பட்ட மக்களை இதுவரை காவு வாங்கியிருக்கிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் நடுக்கம் போன்றவை சார்ஸ் வைரஸ் நோய் தொற்றின் அறிகுறியாகும். சார்ஸ் வைரஸ் தீவிரமான சுவாசக் கோளாறுகளுக்கு மனிதர்களை ஆளாக்கி கொல்லும் தன்மை கொண்டது ஆகும்.

சீனாவில் மட்டும் சார்ஸ் வைரஸால் 700 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வைரஸ் புனுகுப் பூனையில் இருந்து தோன்றியது ஆகும். தற்போது வரையிலும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான எந்த மருத்துவச் சிகிச்சையும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனா – மெர்ஸ் வைரஸ் (MERS)

கடந்த ஆண்டு கொரோனா வகையைச் சேர்ந்த மெர்ஸ் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப் பட்டது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பரவிய இந்த வைரஸ் ஒட்டகங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது. சுமார் 858 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனா – நாவல் வைரஸ் (Corona Novel)

கொரோனா வகையைச் சார்ந்த நாவல் வைரஸ் தற்போது சீனாவில் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவி வருகிறது. 31, டிசம்பர் 2020 இல் நாவல் வைரஸின் தொற்று கண்டுபிடிக்கப் பட்டது. விலங்குகளின் இறைச்சியிலிருந்து இந்த வைரஸ் பரவுகிறது என்றும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது என்றும் தற்போது மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  கொரோனா – நாவல் வைரஸால் 80 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 3,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இது தவிர இன்னும் பல வைரஸ் தொற்றுகள் மனிதர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் மேற்கண்ட எந்த ஒரு வைரஸ் பாதிப்புகளுக்கும் இதுவரை முழுமையான நோய் சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நோயின் அறிகுறிகளைக் கொண்டு எந்த வகையான நோய்த் தன்மை எனக் கண்டுபிடிக்கப் பட்டவுடன் அதன் துணை மருந்துகள் தான் கொடுக்கப் படுகின்றன. மருத்துவ  உலகம் இன்னும் பல முனைகளில் வளர வேண்டிய தேவையை இந்த நோய் கிருமிகள் எடுத்துக் காட்டுவதோடு, புதிய வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்தாத வண்ணம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை நமக்கு வலியுறுத்துகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.