close
Choose your channels

மலைக்க வைக்கும் ஆசிரியப்பணி… ரூ.7 கோடி பரிசுத்தொகை, சர்வதேச விருது பெற்ற இந்தியர்…

Saturday, December 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலைக்க வைக்கும் ஆசிரியப்பணி… ரூ.7 கோடி பரிசுத்தொகை, சர்வதேச விருது பெற்ற இந்தியர்…

 

உண்மையான மாற்றத்தை ஆசிரியரால் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்தில் உறுதிக்கொண்ட ரஞ்சித் டிசாலே எனும் 32 வயது பள்ளி ஆசிரியர் சர்வதேச விருதினை தட்டிச்சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார். இந்த விருதின் மூலம் அவருக்கு கிடைத்த பரிசுத் தொகையும் அவர் செய்த பணிகளும் பார்ப்போரை மலைக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சோல்பூரி மாவட்டத்தில் உள்ள பரிதேவடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி ஜில்லா பரிஷத். இந்தப் பள்ளிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முறையாகப் பணிக்கு சென்றார் டிசாலே. அப்போது அந்தப் பள்ளி மாட்டுக் கொட்டகையைவிட படுமோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களை தற்போது சர்வதேச தரத்திற்கு உயர்த்திக்காட்டி இருக்கிறார் இவர். காரணம் மாற்றத்தை எப்போது செயலில் விரும்புபவர் டிசாலே.

இவர் மாணவர்களுக்கு புரியும் வகையில் பள்ளி பாடங்களை தாய் மொழியில் கிடைக்க செய்தார். மேலும் உயர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தாய் மொழியில் பாடங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தானே பாடங்களை தாய் மொழியில் உருவாக்கியும் கொடுத்து இருக்கிறார். ஒரு வசதியும் இல்லாத அந்தப் பள்ளி மாணவர்களை தனது வீட்டிற்கே அழைத்துச் சென்று, அறிவியல் ஆய்வகக் கூடத்தை உருவாக்கி அதில் பாடம் நடத்தி இருக்கிறார். வார இறுதி நாட்களில் அருகில் உள்ள பல்வேறு இடத்திற்கு களப்பணிக்காக மாணவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார். இப்படி படிப்பின் மீதான ஆர்வத்தை மாணவர்களுக்குத் தூண்டி பள்ளியை உயர் தரத்திற்கு மாற்றி காட்டினார்.

மேலும் பெண்களுக்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதையும் கூடவே எடுத்துச் சொல்லி இருக்கிறார். இதனால் அப்பகுதியில் தற்போது பதின்ம வயது திருமணங்களே நடப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இத்தகைய அரும்பணிக்காக இவருக்கு Global Teachers Prize 2020 எனும் சர்வதேச விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தனது ஆசிரியப்பணியில் டிசாலே செய்த புரட்சியைவிட பரிசுத் தொகையிலும் புரட்சி செய்ததுதான் பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.

உலகம் முழுவதிலும் இருந்து Global Teachers Prize க்காக 10 ஆசிரியர்கள் தேந்தெடுக்கப்பட்டு அதில் முதல் நபராக டிசாலே அறிவிக்கப்பட்டு இருககிறார். இப்படி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அவருக்கு கிடைக்கும் தொகை 1 மில்லியன் US டாலர். இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 37 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய். இந்தத் தொகையை தான் மட்டுமே வைத்துக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. அனைத்து ஆசிரியர்களும் மாற்றத்தை விரும்புபவர்கள்தான். அவர்களின் பணி அளப்பரியது. போற்றத்தக்கது எனக் கூறிய டிசாலே தனது பரிசுத்தொகையில் பாதியை மற்ற 9 ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து விருது அளித்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறார்.

இதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 55 ஆயிரம் US டாலர் வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்கள் தன்னலம் கருதா தெய்வங்கள் என்று அடிக்கடி மேடைப் பேச்சுகளில் கேட்டு இருப்போம். ஆனால் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் ரஞ்சித் டிசாலே உண்மையில் சிறந்த ஆசிரியராக இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார். இதனால் பாராட்டு மழையில் நனைத்தும் வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.