சுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்!

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இடிந்து விழுந்த சுவரால் 22 கைதிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு கைதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இப்படி பெய்த கனமழையால் பிந்த் மாவட்டத்தில் உள்ள பழமையான சிறைக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே 22 கைதிகள் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இதில் ஒரு கைதி உயிருக்கு ஆபத்தான நிலையில் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 5.10 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தால் கைதிகள் யாரும் தப்பித்துச் செல்லவில்லை என்பதையும் சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.