close
Choose your channels

என்னை எல்லோரும் பயன்படுத்தி கொண்டார்கள்: சில்க் ஸ்மிதா எழுதிய கடைசி கடிதம்!

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996ஆம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் இறப்பதற்கு முன்னர் தெலுங்கில் அவர் கைப்பட எழுதிய கடிதம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

’வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா ஆரம்பகட்டத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்தார். குறிப்பாக பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அவர் கவர்ச்சி வேடங்களிலும் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக காலப்போக்கில் மாறினார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இவரது பாடலுக்காகவே பல திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடின என்பது குறிப்பிடத்தக்கது.

புகழின் உச்சத்தில் இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் தெலுங்கில் எழுதிய கடிதத்தில் உள்ள விஷயங்கள் தற்போது ரசிகர்களை கண்ணீரை வரவழைத்துள்ளது.

அந்த கடிதத்தில் அவர் கூறிய்ருப்பதாவது: நான் நடிகையாக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னை யாருமே நேசிக்கவில்லை, பாபு மட்டுமே என்னிடம் கொஞ்சம் அன்பு செலுத்தினார். மற்ற எல்லோரும் என்னுடைய வேலையையும் என்னுடைய உடலையும் தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.

வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் இருந்தது. அந்த ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஏங்கினேன். ஆனால் எனக்கு எங்கு சென்றாலும் நிம்மதி என்பதே இல்லை. எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்திருக்கிறேன். ஆனாலும் என் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்று தெரியவில்லை.

நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபுவிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரை நான் மிகவும் நேசித்தேன். அவர் மட்டுமாவது என்னை கடைசிவரை காப்பாற்றுவார் என்றும், என்னுடன் இருப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவரும் என்னை ஏமாற்றிவிட்டார். கடவுள் இருந்தால் கண்டிப்பாக அவரை தண்டிப்பார். எனக்கு அவர் செய்த கொடுமையை தாங்க முடியவில்லை. என்னுடைய நகைகளையும் அவர் திருப்பி தரவில்லை.

கடவுளே ஏன் என்னை படைத்தார் என்று ஒரு கட்டத்தில் யோசிப்பேன். ராமுவும் ராதாகிருஷ்ணனும் என்னை தற்கொலைக்கு தூண்டினார்கள் அவர்களுக்காக நான் பல நல்ல காரியங்களை செய்து இருந்தேன். ஆனால் அவர்கள் என்னை மரணத்திற்கு தள்ளினார்கள்.

பலர் என்னுடைய உடலையும் என்னுடைய வேலையையும் பயன்படுத்திக்கொண்டனர். நான் யாருக்கும் நன்றி சொல்ல விரும்பவில்லை. ஐந்து வருடங்களாக ஒருவர் வாழ்க்கை தருவதாக கூறினார், அந்த வாழ்க்கைக்காக நான் மிகவும் ஏங்கினேன். ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தை தான் என்று தெரிந்ததும் களைத்துப் போனேன். இனியும் என்னால் தாங்க முடியாது என்பதால் தான் இந்த கடிதத்தை எழுதி வைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.