நாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள்

  • IndiaGlitz, [Friday,February 12 2016]

நாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள்

100 ஆண்டுகள் பழமையான தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கடைசி வரை நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர்கள் ஒருசிலர் இருந்தபோதிலும் இவர்களில் பெரும்பாலானோர் கதாநாயகன் அந்தஸ்தை அடைய முயற்சி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இளையதலைமுறை ரசிகர்களுக்கு விவேக், சந்தானம், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகன்களாக மாறியது மட்டுமே தெரியும். ஆனால் 50 வருடங்களுக்கு முன் நடித்த நகைச்சுவை நடிகர்களும் கதாநாயகன் வேடத்தில் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.எஸ்.கிருஷ்ணன்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர்களுக்கே குருபோன்ற விளங்கிய நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 'சிந்திக்க தெரிந்த மனுத குலத்துக்கு மட்டுமே சொந்தமானது சிரிப்பு' என்று நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமின்றி நகைச்சுவையிலும் சீர்திருத்த கருத்துக்களை உட்புகுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பல நாயகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த என்.எஸ்.கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்த படம் 'நல்ல தம்பி'. கடந்த 1949ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர். ராமச்சந்திரன்: ஒரு திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி சம்பந்தப்பட்ட மெயின் கதை ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் நிலையில் நகைச்சுவை நடிகரின் டிராக் ஒன்று தனியாக செல்லும். இப்படித்தான் பெரும்பாலான படங்கள் அமைந்துள்ளன. ஆனால் ஒரு படம் முழுவதையுமே நகைச்சுவை படமாக மாற்றிய பெருமை உள்ள ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அவர் டி.ஆர்.ராமச்சந்திரன் என்பவர்தான். இவர் சுமார் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்திருந்தாலும், அந்த படங்களில் பெரும்பாலானவை முழுநீள நகைச்சுவை படங்களே. 1938ஆம் ஆண்டு  'நந்தகுமார்' என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் என்ற நடிகருக்கு நண்பனாக அறிமுகமான டி.ஆர்.ராமச்சந்திரன், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் வாயாடி, சபாபதி, ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த முதல் படமான 'நாம் இருவர்', வாழ்க்கை, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற  பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் கிட்டத்தட்ட முழுநீள நகைச்சுவை படங்களே. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் டி.ஆர். ராமச்சந்திரன் நாயகனாகவும், சிவாஜி கணேசன் இரண்டாவது நாயகனாகவும் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரை நகைச்சுவை நடிகர் என்று கூறுவதைவிட நகைச்சுவை நாயகன் என்றே கூறலாம்.

சந்திரபாபு: முதன்முதலாக பாடி லாங்வேஜ் மூலம் நகைச்சுவையை ரசிகர்களுக்கு அளித்த நடிகர் சந்திரபாபு. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதன்முதலாக மேற்கத்திய பாணியில் பாடல்களை பாடி நடனமும் ஆடக்கூடிய ஒரு கலைஞர். எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் பல படங்களில் நகைச்சுவை நடிகராக இருந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்த படம் 'கவலை இல்லாத மனிதன்'. இந்த படத்தை தவிர சந்திரபாபு கதாநாயகனாக நடித்த இன்னொரு திரைப்படம் குமாரராஜா. இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஷ்: சந்திரபாபுவை போலவே தனது ஒல்லியான தேகத்தை வைத்து கொண்டு பாடி லாங்குவேஜ் உடன் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நாகேஷ். முதன்முதலாக டைமிங் காமெடியை புகுத்தி ரசிகர்களை எதிர்பாராத நேரத்தில் சிரிக்க வைப்பதில் வல்லவர். நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் இவரையும் கதாநாயகன் ஆசை விடவில்லை. இவரை கதாநாயகனாக நடிக்க வைத்து அழகு பார்த்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். முதன்முதலாக நீர்க்குமிழி' என்ற படத்தில் கதாநாயகனாக மாற்றிய பெருமை இவருக்கு சேரும். அதன்பின்னர் எதிர்நீச்சல், யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கொடுமையான வில்லனாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோ.ராமசாமி: நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்கிய நடிகர் சோ, நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறார். திரைப்படத்தில் மட்டுமின்றி பத்திரிகை துறையிலும் தனது நகைச்சுவை தன்மையை வெளிப்படுத்தியவர். திரைப்படத்திலும், நாடகங்களிலும் நகைச்சுவை நடிகராக விளங்கிய சோ, முகம்மது பின் துக்ளக்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமின்றி அந்த படத்தை இயக்கியும் உள்ளார். மேலும் இவர் உண்மையே உன் விலை என்ன, மிஸ்டர் சம்பத், யாருக்கும் வெட்கமில்லை, சம்போ சிவசம்போ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் சீனிவாசன்: எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார் படங்களில் முக்கிய நகைச்சுவை நடிகராக விளங்கியவர். மேலும் ரஜினிகாந்த் நடித்த பில்லா, தில்லுமுல்லு ஆகிய படங்களில் இவர் நடித்த கேரக்டர் மிகவும் வலிமையானது. நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த தேங்காய் சீனிவாசன் குணசித்திர நடிகராகவும், 'கலியுக கண்ணன்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து தனது முழு திறமையை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி: மற்றவர்களை கிண்டல் செய்தும், பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டும் திடீர் திடீரென சக நடிகர்களை அடித்தும் இவர் செய்யும் நகைச்சுவை பல ஆண்டுகளாக மக்களால் ரசிக்கப்பட்டது. கதாநாயர்களை கூட விட்டு வைக்காமல் இவர் செய்யும் கிண்டல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. ஒருகாலத்தில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்ற அளவுக்கு அனைத்து படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவரும் கதாநாயகன் வேடத்தை ருசித்து பார்த்தவர்தான். கவுண்டமணி சுமார் பத்து படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தென் மற்றும் சமீபத்தில் வெளியான '49ஓ' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

வடிவேலு: வைகைப்புயல் என்று அன்புடன் அழைக்கப்படும் வடிவேலு, தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி மக்களை சிரிக்க வைத்தார். கவுண்டமணி பிறரை அடித்தே நகைச்சுவை செய்பவராக இருந்த நிலையில் அடிவாங்கியே நகைச்சுவையை வெளிப்படுத்தியவர் வடிவேலு. பெரும்பாலான படங்களில் வீண்வம்பு இழுத்து பின்னர் அடிவாங்குவதுதான் இவருடைய பாணி. இப்போதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வடிவேலும் ஒருசில படங்களில் கதாநாயகன் வேடத்தில் நடித்துள்ளார். 'சிம்புதேவன் இயக்கிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக அதுவும் இரட்டை வேட கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' மற்றும் 'எலி' போன்ற படங்களில் வடிவேலு கதாநாயகான நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக்: சின்னக்கலைவாணர் என்ற பட்டத்துடன் அவரை போலவே நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களையும் இணைத்தவர் நடிகர் விவேக். 'எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது' போன்ற வசனங்கள் மூலம் மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டியவர். இந்நிலையில் விவேக்கும் ஒருசில படங்களில் நாயகனாக நடித்தார். 'பத்தாயிரம் கோடி, நான் தான் பாலா, பாலக்காட்டு மாதவன் போன்ற படங்கள் விவேக் நாயகனாக நடித்த படங்கள் ஆகும்.

கருணாஸ்: இயக்குனர் பாலாவின் 'நந்தா' படத்தில் அறிமுகமான நடிகர் கருணாஸ், அதன்பின்னர் பல படங்களில் தந்து வித்தியாசமான டயலாக் டெலிவரி மூலம் வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இருப்பினும் நாயகன் ஆசை இவரையும் விடவில்லை. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'அம்பாசமுத்திரம் அம்பானி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியதோடு இந்த படத்தை அவரே தயாரித்தார். மேலும் சந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களும் கருணாஸ் ஹீரோவாக நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளர் மற்றும் பாடகராகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம்: தற்கால இளைஞர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் காமெடி நடிகர் சந்தானம். ஹீரோக்கள் உள்பட அனைவரையும் கலாய்ப்பதே இவருடைய நகைச்சுவையின் வெற்றி. சின்ன சின்ன பஞ்ச் டயலாக்குகள் மூலம் இவர் கலாய்க்காத நடிகர்களே இல்லை என்பது குறிப்பிடத்தகக்து. இந்நிலையில் இவரும் வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என நாயகனாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்கால இளையதலைமுறை நடிகர்கள் வரை நகைச்சுவை கேரக்டர்களை அனைவரும் விரும்பி நடிப்பதுண்டு. ஒரு நல்ல நடிகராக வேண்டும் என்றால் கண்டிப்பாக அவருக்கு நகைச்சுவை தன்மை இருக்க வேண்டும். ஒரு பெரிய ஹீரோ நகைச்சுவை கலந்த கேரக்டரில் நடிக்கும்போது ஏன் நகைச்சுவை நடிகர்களும் ஒரு பெரிய ஹீரோவாக ஆகக்கூடாது? என்பதை நிரூபித்தவர்களில் ஒருசில நடிகர்களை மேலே உள்ள கட்டுரையில் பார்த்தோம். திரைப்படம் என்பது ரசிகர்களை சிரிக்க வைக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. அந்த வகையில் சிரிக்க வைக்கும் சிரிப்பு நடிகர்களை சீரியஸான நாயகனாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் நமது தமிழ் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தயாரிப்பாளராக மாறிய விஜய் இயக்குனர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து 'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் இயக்குனரான அட்லி, அந்த படத்தின் வெற்றி காரணமாக விஜய்யின் 'தெறி'...

'சார்லி' தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'சார்லி' மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியது....

விசாரணை'யில் இருந்து விலகினாரா அக்ஷயகுமார்?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல...

'இறுதிச்சுற்று' இரண்டாம் பாகம் வருமா? இயக்குனர் சுதா பதில்

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவியாளரான இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள 'இறுதிச்சுற்று'....

ஒரே மாதத்தில் கபாலி-தெறி ஆடியோ விழா?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அவர் கூறியிருந்தார் என்பதை நேற்று பார்த்தோம்...