close
Choose your channels

சாலையோர சில்லி சிக்கன் கடையை நடத்தும் நடராஜனின் தாய்… குக்கிராமத்தில் இருந்து ஒரு வெற்றியாளர்!!!

Friday, December 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாலையோர சில்லி சிக்கன் கடையை நடத்தும் நடராஜனின் தாய்… குக்கிராமத்தில் இருந்து ஒரு வெற்றியாளர்!!!

 

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதனால் பலரின் கவனத்தை ஈர்த்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இடம்பெறும் டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக விளையாட இவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தேர்வுக்குப்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒன்டே கிரிக்கெட் போட்டியிலும் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டு தனது முதல் ஒன்டே சர்வதேசப் போட்டியில் மிகச் சிறப்பான பந்துகளை வீசினார். அதன் மூலம் சர்வதேச அளவில் அடையாளம் பெற்றார். மேலும் அணியின் வெற்றிக்கு நடராஜன் சிறப்பான பங்களிப்பை செய்தார் என்றும் புகழப்பட்டார்.

முதல் ஒன்டே சர்வதேசப் போட்டியில் 2 விக்கெட்டுகளுடன் ஆரம்பித்த இவரின் வெற்றித் தொடக்கம், அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் இவரின் அபாரமான பந்து வீச்சு இந்திய அணிக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணி வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எப்போதும் அமைதியாக இருக்கும் இவரின் தோற்றம் ஆட்ட நேரத்தின்போது மட்டும் புயலாக சீறிப்பாயத் தொடங்கி விடுகிறது.

வேகப்பந்து வீச்சாளரான இவர் யாக்கர் மற்றும் கட்டர் பந்து வீசும் முறையில் தேர்ந்த வீரராக இருந்து வருகிறார். இந்த வெற்றித் தொடக்கம் சர்வதேச அளவில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் வாய்ப்பை உறுதியாகப் பெற்றுத் தரும் எனப் பலரும் நடராஜனை குறித்து வாழ்த்துகின்றனர். இப்படி வெற்றிப்படியில் ஜொலிக்கும் இவரது இளமைக்காலம் ஒரு குக்கிராமத்தில் தொடங்கியது என்றால் நம்பமுடியுமா?

தங்கராசு நடராஜனின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி எனும் கிராமம். பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்குதான். அவருடைய அப்பா தங்கராஜ் ஒரு சாதாரண நெசவுத் தொழிலாளி. அம்மா சாந்தா சின்னப்பட்டியில் உள்ள சாலையோரத்தில் சில்லி சிக்கன் கடையை வைத்து நடத்தி வருகிறார். மகன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி பாராட்டு மழையில் நனைந்து வரும்போதும் இவர் சாலையோரக் கடையில் மும்மரமாக வேலை செய்து வருகிறார் என்பதுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.

நடராஜனுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் வரையிலும் டென்னீஸ் மீதுதான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. அந்த சிறு வயதில் பாடப்புத்தகத்தைக் கூட வாங்க முடியாத வறுமை நிலையிலேயே இவர் வளர்ந்து வந்திருக்கிறார். இப்படியே முடிந்த அவருடைய குழந்தைப் பருவம் அவருடைய 20 ஆம் வயதில் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து பந்து வீசும் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் ஜெயபிரகாஷ் எனும் அவருடைய சகோதரரின் உதவியோடு சென்னையில் நடந்த சில கிரிக்கெட் போட்டிகளில் முதலில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இப்படித்தான் அவருடைய ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை வலியோடு தொடங்கி இருக்கிறது.

அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு ராஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அந்தப் போட்டியில் இவர் வெளிப்படுத்திய பந்து வீச்சு முறை கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனால் போட்டியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பையும் அவர் இழந்தார். அடுத்து ஒரு வருட இடைவெளியில் தனது பந்து வீசும் முறையை பன்மடங்காக மேம்படுத்தினார்.

இதனால் தமிழகத்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. அந்த போட்டிகளில் தனது முழு திறமையையும் இவர் வெளிப்படுத்தினார். இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் ஐபிஎல் அணி இவரை தேர்வு செய்திருக்கிறது. பின்னர் 2018 முதல் ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இவர் விளையாடி வருகிறார். தன்னுடைய முதல் ஐபிஎல் அனுபவத்தைப் பற்றி கூறும் இவர் ஆரம்பத்தில் எனக்கு சரியான வாய்ப்பு இல்லாமல்தான் இருந்தது. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இடது கை பழக்கம் கொண்டவர் இவர் யாக்கர் மற்றும் கட்டர் பந்து வீச்சில் சிறப்பான திறன் கொண்டவராக திகழ்கிறார். தற்போது 30 வயதாகும் நடராஜன் சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா என்ற ஸ்தானத்தையும் பெற்ற இருக்கிறார். இதனால் மகிழ்ச்சி கடலில் தத்தளித்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். இத்தனை புகழுக்கும் பாராட்டுக்கும் சொந்தக்காரரான இவரின் அம்மா சாந்தா இன்றும் சாலையோர உணவுக் கடையை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆனால் இதுகுறித்து சிறிதும் அலட்டிக் கொள்ளாத அவர் எனக்கு உழைக்க வேண்டும் என்பதால் இந்தக் கடையை தொடர்ந்து நடத்த வருகிறேன் எனக்கூறி மேலும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்கராசு நடராஜன் 16 போட்டிகளில் பந்து வீசி 16 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒன்டே மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி நட்சத்திர அந்தஸ்துக்கு முன்னேறி வருகிறார். நடராஜனின் இத்தகைய முன்னேற்றம் கனவுகளோடு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு புது உத்வேகத்தை அளிக்கும் என்றால் அது மிகையாகாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.