close
Choose your channels

இந்திய கிரிக்கெட்டின் போர்க்கள நாயகன் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Saturday, July 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
"தாதா" என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பெங்கால் டைகர் கங்குலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இவர் ஓய்வு பெற்று எட்டு வருடங்கள் ஆகிறது. ஆனாலும் இன்னும் இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதே இவரது புகழுக்கு சான்று.

இந்தியாவின் முதல் ஆக்ரோஷமான கேப்டன் என்றால் அது கங்குலிதான். மைதானத்தில் தாதா இறங்கிவிட்டால் போட்டி முடியும் வரை ஆக்ரோஷம் தான். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியினர்களுக்கு சிம்மசொப்பனாக இருந்தவர். இக்கட்டான நேரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவர்.
இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. அறிமுகமான முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அனைவரின் பார்வையையும் தன்மீது திரும்ப வைத்தார். கங்குலி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அடித்த 131 ரன்கள் தான் இன்றுவரை அறிமுக வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்
சச்சின் தெண்டுல்கருடன் இணைந்து சிறப்பான ஒப்பனிங்கை பல வருடங்கள் கொடுத்தார். குறிப்பாக ஜிம்பாவேவுக்கு எதிரான ஒரு போட்டியில் 197 ரன்கள் இலக்கை தொடக்க ஆட்டக்காரர்களான சச்சினும் கங்குலியுமே எடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தனது முத்திரையை பதித்தவர் கங்குலி. உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் கங்குலியும் ஒருவர்.
கங்குலி கேப்டனாக பதவியேற்றபோது இந்திய அணி சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னாபின்னாமாகியிருந்தது. ஆனால் அணி வீரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு புத்துணர்ச்சியான அணியை உருவாக்கிய பெருமை கங்குலிக்குதான் சேரும். குறிப்பாக சேவாக்கின் திறமையை கண்டறிந்து தன்னுடைய ஓப்பனிங் இடத்தை அவருக்கு விட்டுக்கொடுத்தவர். யுவராஜ் சிங், ஜாகீர்கான், உள்பட பல வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அவர்களை முன்னணி வீரர்களாக்கியது கங்குலிதான்
ஸ்லெட்ஜிங் எனப்படும் எதிரணியை மனதளவில் தாக்கும் கலை ஆஸ்திரேலிய வீரர்களுக்கே உரியது. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் கேப்டன் ஸ்டீவ்வாக்கையே எரிச்சலூட்டிய ஒரே வீரர் கங்குலிதான்.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் சட்டையை கழட்டி சுழட்டிக்கொண்டே தனது வெற்றியை வெறித்தனமாக வெளிப்படுத்திய வீடியோ இன்றளவும் யூடியூபில் பிரபலம்.
2003ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் அணியை இறுதி வரை அழைத்து சென்றவர் கங்குலி. அன்றைய தினம் டாஸ் வென்றும் பவுலிங்கை கங்குலி தேர்வு செய்தது தவறு என்றும் அதனால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என்றும் இன்றும் அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாத கங்குலி தான் எடுத்த முடிவு சரிதான் என்பதில் உறுதியாக இருந்தார்
கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினை விட அதிகளவில் வெறித்தனமான ரசிகர்களை கொண்டவர் கங்குலி. குறிப்பாக கொல்கத்தா மைதானத்தில் கங்குலியை பகைத்து கொண்டு யாரும் விளையாட முடியாது. 2011ஆம் ஆண்டு கங்குலி இல்லாத கொல்கத்தா அணிக்கு கொல்கத்தா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்குலி கோபக்காரர்தான். எதிரணியினர் விரும்பாதவர்தான். ஆனால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஏராளம். கங்குலி ஒரு ஆளுமையுள்ள கேப்டன், அவரது பாணியில் பாதியை பின்பற்றினாலே அடுத்து வரும் கேப்டன்கள் வெற்றிகரமாக வலம் வரமுடியும். ஓய்வு பெற்றாலும் இந்திய அணிக்கு அவரது ஆலோசனைகள் கண்டிப்பாக தேவை. இந்த இனிய பிறந்த நாளில் கொல்கத்தா டைகர் கங்குலிக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.