டைட்டிலை அடையாளமாக கொண்ட தமிழ் நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,May 31 2016]

டைட்டிலை அடையாளமாக கொண்ட தமிழ் நட்சத்திரங்கள்

பொதுவாக ஒரு நபரை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அந்த நபரின் பெயரை சொன்னாலே போதும். இது பிரபலமானவர்களுக்கும் பொருந்தும். பெயரை சொன்னாலே அவரை பற்றி பாதி சொல்லிவிடலாம். ஆனால் ஒருசிலர் மட்டும் இதில் விதிவிலக்கு. எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும் அவர் பெயரை மட்டும் தனியாக சொன்னால் அவரை இனம் கண்டுகொள்ள முடியாது. அவருக்கு என்று அமைந்திருக்கும் அடைமொழியை கூறினால்தான் அந்த நபர் யார் என்பதையே கூறமுடியும். இந்த விதி திரையுலகினர்களுக்கும் விதிவிலக்கல்ல...எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவரது பெயரை மட்டும் கூறினால் இந்த பெயரில் ஒரு நடிகர் இருக்கின்றாரா? என்ற கேள்வி எழும். ஆனால் அவரையே அடைமொழியுடன் கூறினால், உடனே அவரை தெரிந்து கொள்வோம். உதாரணமாக 'ரவி' என்ற மிகப்பெரிய நடிகர் இருக்கின்றார் என்றால் அவர் யார் என்று நாம் யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதே 'ஜெயம்' ரவி என்றால் அடுத்த வினாடியே நாம் அந்த நடிகரை புரிந்து கொள்வோம். இவ்வாறு தாங்கள் நடித்த படங்களின் டைட்டில்களையே அடைமொழியாக கொண்டிருக்கும் ஒருசில நடிகர்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்...

நிழல்கள் ரவி

பாரதிராஜா அறிமுகப்படுத்திய நட்சத்திரங்களில் ஒருவர் நிழல்கள் ரவி. 'நிழல்கள்' படத்தில் அறிமுகமானதால் அவருடைய பெயருக்கு முன்னால் இன்று வரை அந்த படத்தின் பெயர் ஒட்டிக்கொண்டது. வில்லன், நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பசி சத்யா

இயக்குனர் துரை இயக்கிய 'பசி' என்ற படத்தில் அறிமுகமான குணசித்திர நடிகை சத்யா. இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு அடைமொழியாக அவர் நடித்த முதல் படத்தின் பெயர் நிலைத்துவிட்டது.

மேஜர் சுந்தர்ராஜன்:

ஏ.வி.எம் தயாரிப்பில் கே.பாலசந்தர் இயக்கிய 'மேஜர் சந்திரகாந்த்' என்ற படத்தில் அறிமுகமான சுந்தர்ராஜன், அந்த படத்திற்கு பின்னர் 'மேஜர் சுந்தர்ராஜன்' என்றே அழைக்கப்படுகிறார். சுமார் 900 திரைப்படங்களில் குணசித்திர, வில்லன், காமெடி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பெற்றுள்ள நடிகர்களில் ஒருவர் மேஜர் சுந்தர்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்ணிற ஆடை நிர்மலா

எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் பின்னாளில் நடித்து மிகப்பெரிய புகழை பெற்றாலும் நடிகை நிர்மலாவுக்கு தனது பெயருக்கு முன்னாள் இவர் நடித்த முதல் படமான 'வெண்ணிற ஆடை' என்ற பெயர் இன்றும் ஒட்டிக்கொண்டுள்ளது. ஸ்ரீதர் இயக்கிய இந்த படத்தில்தான் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்ணிற ஆடை மூர்த்தி:

நிர்மலா அறிமுகமான அதே படத்தில்தான் மூர்த்தியும் அறிமுகமானார். நிர்மலாவை போலவே இவருக்கும் இந்த படத்தின் டைட்டில் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. இன்றுவரை நகைச்சுவை வேடங்களில் கலக்கி கொண்டிருந்தாலும் இவருக்கு மறக்க முடியாத ஒரு படமாக இந்த படம் அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையில்லை.

ஆடுகளம் நரேன்:

கடந்த 1997ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கிய 'ராமன் அப்துல்லா' என்ற படத்தில் அறிமுகமான நடிகர் நாராயணன். ஆனால் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பதிய வைத்த படம் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம்தான். எனவேதான் இந்த படத்திற்கு பின்னர் அவர் ஆடுகளம் நரேன்' என்றே அழைக்கப்பட்டார். இந்த படத்திற்கு பின்னர் கதாநாயகன்- கதாநாயகிக்கு தந்தை என்றால் இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று பல இயக்குனர்கள் கருதி இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

ஜெயம் ரவி:

கடந்த ஆண்டி கோலிவுட்டின் நாயகன் யார்? என்று கேட்டால் அனைவரும் கூறும் பெயர் 'ஜெயம்' ரவி. கடந்த 2003ஆம் ஆண்டு அவரது சகோதரர் ஜெயம் ராஜா இயக்கிய 'ஜெயம்' படம்தான் அண்ணன் தம்பி இருவருக்குமே ஜெயம்' என்ற டைட்டிலை கொடுத்துள்ளது. ஜெயம் படத்திற்கு பின்னர் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இவரை இன்றுவரை அடையாளம் காட்ட உதவுவது 'ஜெயம்' என்ற அடைமொழிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜித்தன் ரமேஷ்:

பிரபல தயாரிப்பாளார் ஆர்.பி.செளத்ரியின் இளையமகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ், கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான 'ஜித்தன்' என்ற படத்தில் அறிமுகமான இவர் அதன் பின்னர் 'மதுரை வீரன்', 'புலி வருது', 'ஒஸ்தி' போன்ற பல படங்களில் நடித்தவர். இன்றும் ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்படும் அவர் நடித்த 'ஜித்தன் 2' படமும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

'கயல்' ஆனந்தி:

பிரபுசாலமன் இயக்கத்தில் சமீபத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'கயல்' படத்தில் அறிமுகமான நடிகை ஆனந்தி. அதன் பின்னர் இவர் சண்டிவீரன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா உள்பட விரைவில் வெளியாகவிருக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வரை நடித்து வருகிறார். ஆனாலும் இவரை அடையாளம் காட்டுவது 'கயல்' படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவாசல் விஜய்:

'தலைவாசல்' என்ற படத்தில் அறிமுகமான பிரபல குணசித்திர நடிகர் விஜய் அந்த படத்தின் வெற்றி காரணமாக 'தலைவாசல் விஜய்' என்றே அழைக்கப்படுகிறார். ஏற்கன்வே 'விஜய்' என்ற பெயரில் இளையதளபதி இருப்பதால் ரசிகர்களுக்கு குழப்பம் வரக்கூடாது என்பதாலும் அவர் இந்த பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாநதி ஷோபனா:

கமல்ஹாசன் நடித்த மகாநதி' படத்தில் அவருக்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமி ஷோபனா அதன் பின்னர் வேறு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கர்நாடக இசையுலகில் பெரும்புகழ் பெற்றார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய பாடல் ஒன்றையும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையுலகில் பெரும் புகழ் பெற்று இருப்பினும் இன்று இவரது பெயரை அடையாளம் காணவேண்டும் என்றால் இவர் நடித்த ஒரே படமான 'மகாநதி' பெயரை சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தர்மா:

கமல்ஹாசன் தயாரித்து நடித்த 'விக்ரம்' படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய தர்மசீலன், இந்த படத்திற்கு பின்னர் விக்ரம் தர்மா' என்றே அழைக்கப்பட்டார். கமல்ஹாசனுடன் பல படங்களில் பணிபுரிந்த இவர் 'யுவா' என்ற படத்திற்காக பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார்.

More News

சசிகுமார் படத்தின் இசையமைப்பாளராக மாறிய நடிகர்

வீரபாகு, ரெஜினா நடித்தா 'ராஜதந்திரம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே...

ரசிகர்களுக்கு விஜய் தரும் பிறந்தநாள் சிறப்பு பரிசு

இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்த நாள் வரும் ஜூன் 22ஆம் தேதி வரவுள்ளதை அடுத்து ரசிகர்கள் தளபதியின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்....

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரன்னிங் டைம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'இறைவி' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு 'யூ/ஏ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது...

சமாதானம் செய்ய வந்த சூர்யா மீது போலீஸ் புகார்.

சென்னை அடையாறு அருகே உள்ள ஒரு சாலையில் பெண் ஓட்டுனர் ஒருவரும்...

அனுஷ்காவின் அதிபயங்கர வில்லன் இவர்தான்....

அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வில்லன் ராணா என்பதும் அனைவரும் அறிந்ததே...