close
Choose your channels

கடுமையான பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும் வெங்காயம்!!! திடுக்கிட வைக்கும் புதுத்தகவல்!!!

Friday, August 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவிலும் கனடாவிலும் அந்நாட்டு காதாரத்துறை நிறுவனங்கள் மக்களிடையே தற்போது வெங்காயத்தைப் பற்றி கடுமையான எச்சரிக்கை தகவல்களைக் கூறிவருகின்றன. காரணம் அந்நாட்டில் தற்போது புதிதாகப் பரவிவரும் சால்மோனெல்லோ பாக்டீரியா தொற்றுக்கும் வெங்காயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் உற்பத்தி செய்த வெங்காயத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்த தொற்று பரவுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தாம்சன் இண்டர்நேஷனல் நிறுவனம் விற்ற வெங்காயத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை நிறுவனங்கள் தற்போது விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சால்மோனெல்லோ பாக்டீரியா தொற்று என்பது பொதுவாக விலங்குகளிடம் காணப்படும் ஒருவகை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது மனிதர்களைத் தாக்கும்போது முதலில் குடல் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தி சால்மோனெல்லோசிஸ் தொற்று என்ற புது நோயை உண்டு பண்ணுவதாகவும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, மலத்தில் இரத்தம் வடிதல், குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்டதாக இருக்கும் இந்நோய்த்தொற்று குடல் பகுதிகளில் கடுயைமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது எனவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். சிலருக்கு மாதக்கணக்கில் கூட இந்தப் பாதிப்புகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

நோய்த்தொற்று ஏற்பட்ட 2-7 நாட்களில் இதன் அறிகுறிகள் தெரியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சில நேரங்களில் குடல் பகுதிகளில் உள்ள நோய்த்தொற்று இரத்த ஓட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5 வயதிற்கும் கீழான குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்நோய்த்தொற்று அதிகமாக ஆளாகிறார்கள் எனவும் அமெரிக்காவின் நோய்த்தொற்று மற்றும் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்தப் புதுவகை பாக்டீரியா தொற்றினால் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் அதிகளவில் இந்நோய்த்தொற்று பரவிவருவதாகவும் கூறப்படுகிறது.

அசுத்தமான நீர் மற்றும் உணவுகளை உட்கொள்ளும்போது இந்நோய்த்தொற்று மனிதர்களுக்கு பரவும் எனக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத்தின் முதல் வாரத்தில் தாம்சன் இண்டர்நேஷனல் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய பல்லாயிரக் கணக்கான டன் வெங்காயத்தின் மூலம் சல்மோனெல்லோசிஸ் நோய்த்தொற்று பரவி வருவதாகவும் அமெரிக்காவின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில் சிவப்பு வெங்காயம் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகிறது என அஞ்சப்பட்ட நிலையில் அடுத்து மஞ்சள், வெள்ளை, இனிப்பு வெங்காயங்களும் பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதனால் தாம்சம் நிறுவனம் விற்பனை செய்த அனைத்து வெங்காயங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

ஆனால் ஏற்கனவே மக்கள் இந்த வெங்காயங்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் கடுமையான பதட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள 43 மாகாணங்களில் 640 பேருக்கு இந்நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மையம் தகவல் அளித்துள்ளது. உட்டா மாகாணத்தில் 90 பேருக்கும், ஓரியென் மாகாணத்தில் 85 பேரக்கும் கலிபோர்னியாவில் 76 பேருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில் இதுவரை 85 பேர் அமெரிக்க மருத்துவ மனைகளில் இதற்காக சிகிச்சை பெற அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல கனடாவிலும் இந்நோய்த்தொற்றால் இதுவரை 239 பேர் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் அவர்களில் 29 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் ஜுன் மற்றும் ஜுலை மாத இடைவெளியில் கனடாவில் இந்நோய்த்தொற்று பரவ ஆரம்பித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப் பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.