close
Choose your channels

17 மாவட்டங்களில் ரூ.247 கோடி மதிப்பிலான நீர்வள ஆதாரப் பணிகளைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர்!!!

Saturday, August 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

17 மாவட்டங்களில் ரூ.247 கோடி மதிப்பிலான நீர்வள ஆதாரப் பணிகளைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர்!!!

 

தமிழகப் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு நீர்வள ஆதாரப்பணித் திட்டங்களுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியிருக்கிறார். இத்திட்டப்பணிகள் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் சுமார் ரூ. 247.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருப்பதாகவும் தமிழக செய்திக்குறிப்பு தகவல் அளித்துள்ளது. இத்திட்டங்களால் 28 தடுப்பணைகள் மற்றும் வெள்ளத் தடுப்பு சுவர்கள், நீர்த் தேக்கங்கள் போன்ற திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத்துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக் கோட்டை பகுதியில் தடுப்பணை கட்டும் பணிக்கு முதலமைச்சர் இன்று காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்படவுள்ள இத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 கன அடி ஆகும். மேலும் தடுப்பணையின் மேற்புறம் 1500 மீட்டர் மற்றும் கீழ்ப்புறம் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வெள்ளத்தடுப்பு கரைகள் அமைக்கப்பட விருக்கின்றன. இந்த தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறியூட்டப்பட்டு, நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயரும். இதனால் இப்பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2,912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1,602 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், காட்டூர் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து, கொள்ளளவினை மேம்படுத்தி, நீர்தேக்கத்தை உருவாக்கிட 62 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம் மேற்கொள்ளப் படவிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூர் அருகில், பாலாற்றின் குறுக்கே 42 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப் படவிருக்கிறது.

மேலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் எலந்தம்பட்டு கிராமத்தில், கெடிலம் ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் திட்டத்திற்கும் முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார். கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில், உளுந்தூர் பேட்டை மற்றும் பண்ருட்டி வட்டங்களில் மலடாற்றினை தொலைகல் 24 ஆயிரம் மீட்டர் முதல் 40 ஆயிரம் மீட்டர் வரை 15 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணி மேற்கொள்ளப்பட விருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் திருநகரி கிராமத்தில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே தொலைகல் 21.20 கிலோ மீட்டரில் 30 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணியும் அமல்படுத்தப்பட விருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உப்பாற்றை சீரமைத்து உப்பாற்றின் குறுக்கே குறுக்கு கட்டுமான கட்டமைப்புகளை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணி தொடங்கப்பட விருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை கிராமம் சீனியப்பா தர்கா அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் திருவாடனை வட்டம், முள்ளிமுனை கிராமம் அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி போன்றவை மேற்கொள்ளப்பட விருக்கின்றன.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார் பட்டி கிராமம், புது அணைக்கட்டு வாயக்காலினை 10 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி மற்றும் போடிநாயக்கனூர் வட்டம் போடிநாயக்கனூர் கிராமம் அணைப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ராஜ வாய்க்கால் அணைக்கட்டை புணரமைத்தல் மற்றும் ராஜ வாய்க்கால் அணைக்கட்டின் மேல்புறம் மற்றம் கீழ்புறத்தில் 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டும் பணி போன்றவை நடைபெற இருக்கிறது.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டங்களில் மலட்டாறு வாய்க்காலினை 0 மீட்டர் முதல் 24 ஆயிரம் மீட்டர் வரை 7 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியும் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் கிராமத்தில் 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோவி வட்டம் அரக்கன்கோட்டை கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களில் மைல் ½ முதல் 20/1 வரையிலான பாசன மதகுகள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணியும் நடைபெற விருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம், நத்தம் கிராமம் திருமணி முத்தாற்றின் குறுக்கே காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டிணை 3 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யும் பணியும் நடைபெற விருக்கிறது. மற்றும் குஜிலியம் பாறை வட்டம், பாளையம் கிராமம் விராலிப்பட்டி கிராமத்திலுள்ள கசிவு நீர் குட்டையினை 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி கிராமம் புல் எண்-487 இல் நங்காஞ்சியாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியும் நடைபெற விருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் மதயானைப்பட்டி கிராமம் அருகில் பேராம்பூர் வாரியின் குறுக்கே 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டும் பணியும் தொடங்கப்பட வுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள உடுமலைக் கால்வாய் தொலைகல் 16.600 கி.மீ முதல் 23.170 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மானக் கால்வாய்களில் விடுபட்டுள்ள கால்வாயினை 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணியும் தொடங்கப்பட விருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் திருக்கண்ணமங்கை வாய்க்காலில் உள்ள கட்டுமானங்களை 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் கரைகளை பலப்படுத்தி புணரமைக்கும் பணியும் நடைபெற விருக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ். அம்மாபட்டி மற்றும் வடுகபட்டி கிராமங்களில் ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில் அர்ஜுனா நதியின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியும் தொடங்கப்பட விருக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாயினை தொலைகல் 36.00 கி.மீ முதல் 39.50 கி.மீ வரை 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், நீர்வள ஆதாரத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே. ராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos