close
Choose your channels

இந்திய- சீன எல்லை பதற்றத்துக்குக் காரணம் ஒரே ஒரு சாலைதான்: எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்???

Thursday, June 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய- சீன எல்லை பதற்றத்துக்குக் காரணம் ஒரே ஒரு சாலைதான்: எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்???

 

இந்திய –சீன எல்லைப் பகுதியில் கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சீன அரசு இராணுவ வீரர்களை குவித்தது. அதைத் தொடர்ந்து நடந்த சர்ச்சையில் இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இப்படி ஆரம்பித்த அச்சுறுத்தல் பின்னர் கடும் பதற்றமான போர்ச் சூழலையும் ஏற்படுத்தியது. இந்திய – சீன எல்லையில் நடக்கும் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட அறிக்கை வெளியிட்டு இருந்தார். பின்னர் இந்தியா தரப்பில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. 12 கட்ட பேச்சு வார்த்தையில் இந்தியா தோல்வியடைந்து. பின்பு ஜுன் 6 ஆம் தேதி இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவாத்தையில் முடிவுகள் எட்டப்பட்டு விட்டதாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்து இருக்கிறார். தற்போது இருநாட்டு இராணுவ படைகளும் எல்லைப் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் பட்டு இருக்கின்றன.

இத்தகைய நெருக்கடியான போர் பதற்றத்தை ஏற்படுத்தியது ஒரே ஒரு சாலை கட்டமைப்பு என்பது தான் தற்போது சுவாரசியமே. இந்த சாலை அவ்வளவு முக்கியமா என்ற கேள்வியும் பல்வேறு மட்டங்களில் வைக்கப்படுகிறது. உண்மையில் இந்திய இராணுவத்தைப் பொறுத்த அளவில் இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லைக் குறித்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அக்சய்சன் என்ற பகுதிதான். இந்தப் பகுதி தற்போது வரை சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. ஆனால் இந்தப் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்ற கருத்தை இந்தியா தொடர்ந்த வலியுறுத்தி வருகிறது. இப்படியான விவாதங்களுக்கு இடையில் 1962 ஆம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி இருநாட்டு எல்லைக்களையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

சீனா தனது எல்லைப் பகுதியில் வலுவான இராணுவத் தளவாடங்களை கொண்டு வருவதற்கு ஏற்ற சாலைகளையும் விமான ஓடுதளங்களையும் முன்பே அமைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியா இராணுவத்திற்கு ஒரு இக்கட்டான சூழல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லைப் பகுதியில் உள்ள ஷியோக் நதிக்கரையில் மழைக் காலம் ஏற்பட்டால் அங்குள்ள பல சாலைகளை பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. லடாக் பகுதியில் இருக்கும் இந்த ஷியோக் நதிக்கரைதான் இந்தியாவின் எல்லை இராணுவ விமான தளமாக இருக்கும் தௌலத் பேக் ஒல்ட்டையும் சீனாவின் அக்சய் சன் பகுதியையும் அதுமட்டுமல்லாது காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டு இருக்கும் கில் கிட் போன்ற பகுதியையும் இணைக்கும் முக்கிய வழித்தடம்.

ஷியோக் நதிக்கரையில் சாலைகள் மோசமாக இருப்பதை தொடர்ந்து 255 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு இணையாக ஒரு சாலையை அமைக்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டது. சாலை அமைக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சாலை அமைக்கும் பணி தொடங்கப் பட்டத்தில் இருந்தே சீன இராணுவம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லையில் அச்சுறுத்தலை தொடர்ந்து கொண்டு வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தச் சாலையானது லடாக் பகுதியில் இருந்து ஆரம்பித்து தர்புக் – ஷியோக் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக போடப் பட்டுள்ளது. இந்த சாலை முடிவில் கராகோரம் மலை அடிவாரத்தில் இருக்கும் தௌலத் பேக் ஒல்டி இந்திய இராணுவ விமான ஓடுதளத்தைச் சென்று முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 255 கிலோ மீட்டர் சாலை இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு இணையாக போடப்பட்டுள்ளது. தர்புக் பகுதியில் ஆரம்பிக்கும் இந்த சாலையின் உயரம் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. கராகோரம் மலை அடிவாரத்தில் அதன் உயரம் 16 ஆயிரம் அடி உயரத்தையும் விஞ்சுகிறது. இப்படி கடினமான ஒரு சாலையைத்தான் இந்திய நிறுவனம் ஒன்று கடந்த 20 வருடங்களாக அமைத்துக் கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சாலையில் இருந்து வெறுமனே 10 நிமிடங்களில் சீனாவின் எல்லைப் பகுதியான சின்ஜியாங் பகுதியை அடைந்து விடலாம் எனவும் சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காரகோரம் மலை அடிவாரத்தில் இருக்கும் தௌலத் பேக் ஒல்டி இராணுவ விமான ஓடுதளத்தில் குறைந்த அளவிலான துருப்புகளை மட்டுமே இதுவரை இந்திய இராவணுவத்தால் எடுத்துச் செல்ல முடிந்தது. தௌலத் பேக் ஒல்டி விமான ஓடுதளம் கிட்டத்தட்ட 16 ஆயிரத்து 614 கிலோ மீட்டர் உயரத்தில் இருப்பதும் ஒரு குறைபாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் சாலை பணி முடிவடையும் போது கனரக வாகனங்கள் மூலம் பெரிய துருப்புகளை இந்திய எல்லையில் குவித்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

தர்புக் - ஷியோக் வழியாக செல்லும் புதிய சாலை காஷ்மீரின் ஒரு பகுதியாக இருக்கும் அக்சய் சன்னையும் திபெத் இந்திய எல்லையில் பகிர்ந்து கொண்டுவரும் ஜின் ஜெயிங் பகுதியையும் ஒரே நேரத்தில் இணைத்து விடும். அதேபோல மேற்கில் சீனாவிற்கு சொந்தமான சின் ஜியாங் பகுதியையும் பாகிஸ்தானுக்கு சொந்தமான கில் கிட் பகுதிகளையும் இணைத்து விடலாம். இதைத்தவிர ஷியோக் பகுதியில் ஏற்படும் மழை பெருவெள்ளத்தின் காரணமாக அடிக்கடி சாலைகள் பழுதாகி வருகின்றன. இதைத் தவிர்க்கும் விதமாக இந்தியா ஷியோக் பகுதியில் கிட்டத்தட்ட 37 பாலங்களையும் கட்டி இருக்கிறது. இந்தப் பாலங்கள் மிக எளிதாக தௌலத் பேக் ஒல்டி விமான நிலையத்தையும் இணைத்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஷியோக் பகுதியில் ஒரு புதிய பாலைத்தை திறந்து வைத்தார். அதன் பெயர் பெய்லி. இந்த பாலம் 14 ஆயிரத்து 650 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தியா பாலங்களையும் சாலைகளையும் தொடர்ந்து அமைத்து வருவதற்கும் ஒரு முக்கியக் காரணமும் இருக்கத்தான் செய்கிறது. காஷ்மீர் பகுதியில் இருக்கும் அக்சய் சன் பகுதியை இந்தியா 1962 ஆம் ஆண்டு நடந்த போரில் இழந்துவிட்டது. அதற்குபிறகு அப்பகுதி தொடர்ந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் இந்தியா அந்தப் பகுதியை சீனாவிற்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து சீனா அக்சய் சன் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பகுதியில் சாலை அமைக்காமல் காவல் காக்கும் விதமாக இந்தியா சில காவல் கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் காவல் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதற்குப் பின்புதான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடுமையான எல்லைத் தகராறுகள் தொடர்ந்து வருகின்றன. அக்சய் சன் பகுதியில் நடக்கும் சாலை அமைப்பு பணிகளை கண்காணிக்க முடிவெடுத்த இந்தியா தொடர்ந்து தனது பாதுகாப்பு எல்லைகளை பலப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது. இந்தப் பணிகளை விரும்பாத சீனா லடாக் எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்களை குவித்து அச்சுறுத்தலை ஆரம்பித்து இருக்கிறது. தற்போது எல்லையில் நிலவிய பதற்றம் பேச்சுவார்த்தையால் உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக இருநாடுகளும் அறிவித்து உள்ளன. இதனால் எல்லையில் அமைதி நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.