close
Choose your channels

பணம் சம்பாதிக்க இதுதானா வழி! சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்த பாரதிராஜா

Monday, May 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசமான காட்சிகளுடன் ஒரு திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்திற்கு இளைஞர்களின் ஆதரவு இருப்பினும் பெரும்பாலானோர் இந்த படத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீப காலங்களாக சில தரங்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியமும் இதிகாசமும் சராசரி மனித வாழ்க்கையையும் கொண்டாடிய நம் திரைப்படங்கள் இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்துபோய் கிடக்கின்றன. கொண்டாட வேண்டிய திரைப்படங்கள் இன்று கொள்கையற்று கிடக்கின்றன.

இலைமறை காயாக சொல்லப்பட்ட விஷயங்களை இன்று இலைபோட்டு பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத் துறை. தமிழ் மக்களே ரசனை மாற்றமென்று தரங்கெட்டு படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதை புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம் நம் தமிழ் நாட்டு இளைஞர்களை திசைதிருப்பி நம்முடைய ரசனையை மழுங்கடித்து தற்போதைய தமிழகத்தின் பிரச்னைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது .

இவர்களுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் துணை போவதால்தான் ஆபாசமாக திரைப்படங்களுக்கு தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன! காரணம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும். ஏன் இதற்கு மேலேயும் நடக்கும்! இதற்கு ஒரு முடிவுகட்ட நாள் குறிக்க வேண்டும். இது ஒருபக்கம் இருக்கட்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டு என்ன செய்து கொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக் கூட கத்திரி போட்ட நீங்கள் சமீபகாலமாக ஆபாசமான படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? 

எவ்வளவோ காலங்களாய் அடங்கிக்கிடந்த தமிழினம் தற்போதுள்ள பிரச்னைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது எங்களை பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட நான் சந்தேகப்படுகிறேன். ஆபாசத் திரைப்படங்கள படைக்கும் படைப்பாளர்ளே நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை உங்கள் உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர்!

பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள். திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது எழுதப்பட்ட வாழ்க்கை என்பதை உணருங்கள்! மத்திய தணிக்கை குழு அதிகாரிகளே இரண்டாம் தரமான படைப்புகளை மறுபரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால் சென்சாரையே சென்சார் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.