close
Choose your channels

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டது; சீன அதிபர் ஷி ஜின்பிங் மருத்துவமனையில் ஆய்வு

Tuesday, February 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டது; சீன அதிபர் ஷி ஜின்பிங் மருத்துவமனையில் ஆய்வு

 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 1,011 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்து இருக்கிறது. சார்ஸ் பாதிப்பை விட கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து இருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை 67 பேரும் திங்கட் கிழமையான (நேற்று) 103 பேரும் இறந்துள்ளனர். ஆனால் கொரோனா வைரஸின் பரவல் தன்மை தற்போது குறைந்து வருகிறது எனவும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

கொரோனா போன்ற கொள்ளை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு குழு ஒன்று தற்போது சீனாவிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், அதிபர் ஷி ஜின்பிங் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனையில் ஆய்வு செய்து வருவது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை வெளியில் எங்கும் செல்லாத அதிபர் முதன் முறையாக மூகமடி அணிந்து தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்குள்ள மருத்துவர்களுடன் நோய் சிகிச்சை முறைகளைக் குறித்து உரையாடினார். அப்போது அவருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப் பட்டு இருக்கிறது.

“வைரஸ் நோய்க்கு எதிராக இன்னும் பலமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று மருத்துவர்களிடம் கருத்து பகிர்ந்து கொண்டார். அங்குள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் அதிபர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக, கொரோனா வைரஸ் பற்றி அரசுக்கு எச்சரிக்கை அளித்த ’டாக்டர் லீ’ மருத்துவமனையில் இறந்த செய்தி மக்களை கோபத்திற்கு ஆளாக்கியது. இது குறித்த எந்த தகவலையும் தெரிவிக்காத அரசை சிலர் சமுக ஊடகங்களில் விமர்சித்தும் வருகின்றனர். எங்களுக்கு பேச சுதந்திரம் வேண்டும் என்கிற ரீதியிலான ஹேஷ்டேக்குகள் அந்நாட்டில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் எப்படி பரவியது? எதில் இருந்து பரவியது என்ற கேள்வி உலகம் முழுவதும் கேட்கப் பட்டு வருகிறது. இதுவரை அந்த வைரஸ் எதில் இருந்து பரவியது என்பது கண்டுபிடிக்கப் படவில்லை. அதற்கான தடுப்பு மருந்துகளும் இதுவரை கண்டறியப் படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறது. முன்னதாக, வைரஸ் தொற்று எதில் இருந்து பரவி இருக்கும் என்கிற ரீதியில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப் பட்டு வந்தன.

”உப்பு நீர் கொரோனா வைரஸை கொல்லும். எனவே பொது மக்கள் வெளியில் சென்று வரும் போது உப்பு நீரைப் பயன்படுத்தி வாய் கொப்பளிக்கவும்” என ஒரு சீன மருத்துவர் குறிப்பிட்டதாக அந்நாட்டு சமூக வலைத் தளங்களில் அதிகம் பரப்பப் பட்டு வந்தன. இந்தப் பதிவிற்கு வுஹான் மாகாணத்தின் தலைமை மருத்துவர் “கொரோனா வைரஸ் உப்பு நீரின் தன்மையால் கட்டுப் படாது”என்று தெளிவு படுத்தி இருந்தார்.

மேலும், சீனாவில் பெண் நிருபர் ஒருவர் வௌவால் சூப்பை அருந்தினார் அதில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப் பட்டு வந்தன. அந்த காணொளி 2016 இல் மலை வாழ் மக்களிடையே நடத்தப் பட்ட ஒரு தொகுப்பிற்காக படம் பிடிக்கப் பட்டது என்பதை அந்த நிருபர் சமூக ஊடகங்களில் தோன்றி பதில் அளித்தார். இப்போது பரவிய வைரஸ்க்கும் தான் சாப்பிட்ட வௌவால் சூப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்.

அடுத்ததாக, அமெரிக்காதான் கொரோனா வைரஸை உற்பத்தி செய்தது, அதன் காப்புரிமை முடிவுற்ற அன்று தான் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவிய செய்தி உலகம் முழுவதும் வெளியானது. மேலும், அதற்கான தடுப்பு மருந்துகளும் இருக்கின்றன என்கிற ரீதியில் கிறிஸ் கிரிகாப் என்பவர் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அது முற்றிலும் தவறான தகவல் என்பதையும் அப்போதே உறுதிப்படுத்தினர். கொரோனா வைரஸ்க்கும் அவர் பதிவிட்டு இருந்த காப்புரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை உலக சுகாதார நிறுவனமும் எடுத்துக் கூறியது. ஆனாலும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ் கிரிகாப் என்பவரின் ஃபேஸ்புக் பதிவை கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவை அனைத்தும் வைரஸ் எப்படி பரவியது என்ற எதிர்ப்பார்ப்பு நிலையையே காட்டுகின்றன. தற்போது கொரோனா வைரஸின் பரவும் தன்மை குறைந்து உள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.