close
Choose your channels

தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம்: முரசொலி பவளவிழாவில் கமல்

Friday, August 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பல விஐபிக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். இந்த விழாவில் கமல் பேசியதாவது:

நான் முதன்முதலில் சிவாஜியிடம் தான் தமிழ் கற்றேன். பின்னர் சிவாஜிக்கே வசனம் எழுதி கொடுத்தவர் கலைஞர் என்பதை புரியும் வயது வந்தவுடன் அவருடைய தமிழுக்கு ரசிகனானேன்.

ரஜினி இந்த விழாவிற்கு வருகிறாரா என்று ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம் வருகிறார் என்றார் ஸ்டாலின். அவரும் பேசுகிறாரா என்றேன். இல்லை, மேடைக்கு கீழே அமர்ந்து பார்வையாளராக இருப்பதாக சொல்லிவிட்டார் என்றார். அப்படியானால் நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன். எதுவும் சொல்ல வந்தால் கையை பிடித்து இழுத்துக் கொள்வார் ரஜினி என்ற தைரியம் இருந்தது. விழாவுக்கு அழைத்துவிட்டு ஸ்டாலின் சென்ற பிறகு கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய். இந்த விழா எப்படிப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள் என்றது. தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

அந்த மேடையில் அமர்ந்து கழகத்தில் சேரப்போகிறீர்களா என்று டுவிட்டரில் என்னை கேள்வி கேட்கிறார்கள். சேருவதாக இருந்தால் 1983ல் கலைஞர் டெலகிராம் மூலம் அழைப்பு விடுத்தபோதே சேர்ந்திருப்பேன். கலைஞரின் பெருந்தன்மை என்னவென்றால் அதன்பிறகு இதுவரையிலும் அதுபற்றி கேட்கவில்லை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.

விகடன் பா.சீனிவாசன் பேசும்போது பூனூல் பத்திரிகை என்று கலைஞர் விமர்சனம் செய்ததை சொன்னார். அவரே இந்த விழாவுக்கு மகிழ்வோடு வந்திருக்கும்போது பூனூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? அரசியல் பற்று விமர்சனம் செய்வீர்களா என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா?

திராவிடம் என்பது ஜனகன பாடலில் இருக்கும் வரை இருக்கும். திராவிடம் தென்னிந்தியாவில் மட்டும் உள்ளது என்று நினைக்க வேண்டாம்.திராவிடம் என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது என்பதை மொத்த நாடும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.