close
Choose your channels

ராதாரவிக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

Monday, March 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள பல பிரபலங்கள் ஒரே ஒரு பேட்டி அல்லது ஒரே ஒரு மேடைப்பேச்சால் பல இழப்புகளை சந்தித்துள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து அவருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. இந்த சர்ச்சை பேச்சால் ஏற்கனவே திமுகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திரையுலகிலும் அவருக்கு யாரும் வாய்ப்பு தரக்கூடாது என்ற குரல் ஓங்கி வருகிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

ஒரு டிரைலர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிப்புக்குரிய நடிகர் ஒருவர், சக நட்சத்திரத்தை மனம் புண்படும் வகையில் வெறுப்பை உமிழும், அருவருப்பான வார்த்தைகளை கொண்டு பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சி, அவமதிப்புக்குள்ளான அந்த நடிகை ஹீரோயினாக நடித்த திரைப்படத்துக்காக நடத்தப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சி. ஆனால், அந்த உண்மையை கூட புரிந்து கொள்ளாமல் அந்த நடிகர் பேசும்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் கைதட்டி, சிரித்தார்கள். மூத்த நடிகர் என்ற மரியாதை என்னும் போர்வையில் மரியாதையை நடிகர் ராதாரவி குறைத்துக்கொண்டது வேதனையை தருகிறது.

ராதாரவி மிகுந்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். மரியாதை என்பது பெயரால் வருவது அல்ல, நாம் பேசும் வார்த்தைகள், செயல்களால் வருவது தான் ராதாரவி அவர்களே. கைதட்டலுக்காக ஏதாவது பேச வேண்டும் என நினைத்தால், அதற்கு பல இடங்கள் உள்ளன. அங்கே போய் பேசலாம். தமிழ் சினிமாவில் இருந்து கொண்டே பெண்களுக்கு எதிராகப் பேசுபவரையும், கீழ்த்தரமாக நினைப்பவரையும் துரத்தி அடிக்க விரும்புகிறோம். இந்த நேரம்தான் அதைப் பேசுவதற்கும், நடவடிக்கையில் இறங்கவும் உகந்தது.

நடிகை நயன்தாரா குறித்தும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்தும் நடிகர் ராதாரவி பேசியது சரியானது அல்ல. ஒருபோதும் ஏற்புடையது அல்ல. அவருக்கு எதிராக நாம் குரல் கொடுப்பதற்கு இது சரியான நேரம். இது எதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா, அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். குரல் கொடுப்போம். சரியான மக்களுக்கு கேட்கும் வரை குரல் கொடுப்போம். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்கட்டும். சரியான நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு எடுக்க நமது குரல் அழுத்தம் கொடுக்கட்டும்.

இந்த விஷயத்தை நடிகர் சங்கம் அறிந்திருப்பார்கள் என நம்புகிறோம். நாங்கள் நடிகர் ராதாரவியின் பேச்சை உண்மையாகவே வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் திரைப்படங்களில் அவர் நடிக்க அனுமதிக்கமாட்டோம். நம்முடைய துறையில் இருக்கும் நண்பர்கள், சக தரப்பினருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், ராதாரவியை எந்த திரைப்படத்திலும் நடிக்க வைக்காதீர்கள். ராதாரவிக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம். நம்முடைய பெண்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்காவிட்டால், வேறு யார் கொடுப்பது?''

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.