close
Choose your channels

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, 25 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள்: முழு விபரங்கள்

Sunday, May 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து தற்போது தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் இந்த ஊரடங்கில் சில தளர்வுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு, விழுப்பும்‌, கடலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரியலூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌ ஆகிய 12 மாவட்டங்களில்‌ ஏற்கனவே நடைமுறையில்‌ எந்த மாற்றமும்‌ இல்லாமல்‌ தொடரும்‌. தளர்வுகள்‌ ஏதும்‌ இல்லை.

நீலகிரி, கொடைக்கானல்‌ மற்றும்‌ ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர்‌ சுற்றுலா பயணிகள்‌ செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும்‌ இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்‌.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர பிற பகுதிகளில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும்‌ அனுமதி தொடரும்‌.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌ தவிர தமிழ்நாட்டின்‌ மற்ற பகுதிகளில்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர பிற பகுதிகளில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்‌.

கோயம்புத்தூர்‌, சேலம்‌, ஈரோடு, திருப்பூர்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, இராமநாதபுரம்‌, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்‌ மற்றும்‌ நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும்‌ கீழ்க்கண்ட சில தளர்வுகள்‌ வழங்கப்படுகின்றன:

அந்தந்த மாவட்டங்களுக்குள்‌ போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும்‌ இபாஸ் இல்லாமல்‌ இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள்‌ நோய்‌ தொற்று பரவாமல்‌ தடுக்க பொதுமக்கள்‌ அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும்‌, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும்‌ சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர இபாஸ் பெற்று செல்லும்‌ தற்போதைய நடைமுறையே தொடரும்‌.

அரசுப்பணிகள்‌ மற்றும்‌ தனியார்‌ தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ பேருந்துகளில்‌ அதிகபட்சமாக 20 நபர்களும்‌, வேன்களில்‌ 7 பேர்களும்‌, இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில்‌ 3 நபர்களும்‌, சிறிய கார்களில்‌ 2 நபர்களும்‌ (வாகன ஒட்டுநர்‌ தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டங்களுக்குள்‌ போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில்‌ இபாஸ் இல்லாமல்‌ வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம்‌, மருத்துவம்‌ போன்ற பணி நிமித்தம்‌ பயணம்‌ செய்ய மட்டும்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌. தேவையில்லாமல்‌ வீட்டை விட்டு வெளியில்‌ செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள்‌ தவிர்க்க வேண்டும்‌.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத்‌ தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில்‌ தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும்‌ தொழிற்சாலைகளில்‌ 100 சதவீதம்‌ பணியாளர்களும்‌, 50 நபர்களுக்கு மேல்‌ பணியாளர்களின்‌ எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில்‌ 50 சதவீதம்‌ பணியாளர்களுக்கும்‌ அனுமதி வழங்கப்பட்ட நிலையில்‌ இதை மேலும்‌ தளர்வு செய்து 100 நபர்களுக்கும்‌ குறைவாக பணிபுரியும்‌ தொழிற்சாலைகளில்‌, 100 சதவீதம்‌ பணியாளர்களும்‌ 100 நபர்களுக்கு மேல்‌ பணியாளர்களின்‌ எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில்‌, 50 சதவீதம்‌ பணியாளர்கள்‌ அல்லது குறைந்தபட்சம்‌ 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில்‌ தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்‌ தனியார்‌ மற்றும்‌ வியாபார நிறுவனங்களின்‌ அத்தியாவசிய பராமரிப்புப்‌ பணிகளுக்காக மட்டும்‌ குறைந்தபட்சம்‌ பணியாளர்களுடன்‌ இயங்குவதற்கு அனுமதி.

12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு விடைத்‌ தாள்களை திருத்தும்‌ பணி மட்டும்‌ நடைபெற விலக்களிக்கப்படுகிறது.

தேசிய மற்றும்‌ சர்வதேச விளையாட்டுப்‌ போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர்‌ மூலம்‌ பயிற்சி பெறுவது மட்டும்‌ விலக்களிக்கப்‌படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்‌ தலைவரிடமும்‌, சென்னை மாநகர ஆணையரிடமும்‌ அனுமதி பெற வேண்டும்‌.

மாவட்டங்களுக்குள்‌ போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில்‌ உடன்‌ மருத்துவ சிகிச்சைக்கு மட்டும்‌ சென்று வர பயன்படுத்தப்படும்‌ டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும்‌ விலக்களிக்கப்படுகிறது.

இவ்வாறு முதல்வரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.