அரசியலுக்கு வருவது எப்போது? ரஜினிகாந்த் பதில்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி் வரும் 'தர்பார்' திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று தேர்தலை முன்னிட்டு தனது வாக்கை பதிவு செய்ய மும்பையில் இருந்து சென்னை வந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் மும்பை செல்லவிருப்பதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ரஜினிகாந்த், 'தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம் என்றும், நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது, அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறினார். மேலும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், இந்த கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும் என்று கூறினார்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுகவுக்கு தற்போது 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் கருணாஸ் உள்பட மூவர் தனி அணியாகவும், மூவர் அமமுக ஆதரவாளராகவும் இருப்பதால் 107 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆட்சிக்கு ஆதரவாக உள்ளனர். 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 11 அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்கள் ஆனால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும். அதேபோல் திமுக கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே திமுக ஆட்சி அமைக்கும். இந்த இரண்டும் நடைபெறாத நிலை ஏற்பட்டால் மீண்டும் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவே அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கவும் நேரம் நெருங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.