close
Choose your channels

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை

Friday, October 23, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்னிக்காவது நடக்குமா?!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 3 முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சாதகமாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் கேப்டன் மகேந்திர சிங் தோனி வகுக்கும் வியூகம் எதுவும் அணியின் வெற்றிக்குக் கைகொடுப்பதாக இல்லை.

இளமை எதோ, எதோ?

தவிர, சீனியர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தோனி, இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகிறார். அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்த பின் இளம் வீரர்களைச் சோதித்துப்பார்ப்பது அவர் பாணி. இந்த முறையும் அதையே அவர் கடைப்பிடித்தார். ஆனால், முதல் கட்டத்தில் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருந்தபோதும் அதையே செய்தது மிகப் பெரிய தவறு என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த போட்டியின் தோல்விக்குப் பின் இளைஞர்களிடம் "ஸ்பார்க்" இருப்பதாக நாங்கள் காணவில்லை என்று சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டார். எந்த "ஸ்பார்க்கை" வைத்து கேதார் யாதவைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று வறுத்து எடுத்தார்கள். இனி எதிர் வரும் போட்டியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என வெளிப்படையாகவே தெரிவித்தார். இது ஓரளவுக்கு ஆறுதலான விஷயம்தான். எனவே, இன்று மும்பை அணிக்கு எதிராக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.

மும்பையின் முனைப்பு

மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கான வெற்றி வாய்ப்பை மும்பை அணி பலமாக்கிக்கொள்ளும். அதேபோல இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பழிக்குப் பழி தீர்க்கும் முனைப்பில் இன்று களமிறங்கும்.

ரன் மழை பெய்யும் ஷார்ஜா

இன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடக்கிறது. இங்கு நடந்த பல போட்டிகள் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்தன. கடந்த போட்டியில் சென்னை அணிக்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைத்தபோதும் அதைச் செய்யத் தவறியது. இங்கு இரண்டாவது பேட்டிங் செய்வது கொஞ்சம் சவாலான விஷயம்தான். மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களைச் சந்தித்துத் தோல்வியடைந்தது. இதனால் இன்று இந்த அணி மீண்டு வர வேண்டிய நிலையில் உள்ளது.

பொறுப்பை உணர வேண்டும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே அந்த அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கும். பேட்டிங்கில் சீனியர்களான ஃபாஃப் டூ பிளஸி, ஷேன் வாட்சன் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும்.

சாம் கரன் இன்னிங்ஸைத் தொடங்கினால் பவர் பிளேயில் அதிக ரன்கள் குவிக்கும் முனைப்போடு அவர் ஆட வேண்டும். மிடில் ஆர்டரில் ராயுடுவுடன் ஜகதீசனுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

களத்தில் மின்னல் வேகத்தில் செயல்படுவதற்குப் பெயர் போன தோனியிடம் இந்த முறை வேகம் கொஞ்சம் குறைவாகத்தான் காணப்படுகிறது. ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஓரளவு நன்றாகவே பந்து வீசும் இவர் கடைசி நேரத்தில் ரன்கள் சேர்ப்பதும் கைகொடுக்கிறது.

பவுலிங்கில் கடந்த போட்டியில் தீபக் சாஹர் எழுச்சி பெற்றது சாதகமான விஷயம். இவருடன் சார்துல் தாகூர் கைகோர்க்க வேண்டியது அவசியம். கேதர் ஜாதவ் புதிருக்கான விடை இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

எதிர்ப் பாதை

சென்னை அணியிடம் தோல்வி என்ற நிலையில் தொடரைத் துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பிறகு கீழ் நோக்கிச் சென்ற சென்னை அணிக்கு நேர் எதிர்ப் பாதையில் பயணிக்கத் துவங்கியது. ஒரு சில தடுமாற்றங்களைத் தவிர அந்த அணி வீரர்களைச் சரியான முறையில் பயன்படுத்திவருகிறது. பேட்டிங், பவுலிங் என அணியின் சமநிலையைச் சரியாகப் பேணிவருகிறது.

ஐபிஎல்லின் 'எல் கிளாசிகோ'வாக (நட்சத்திர அந்தஸ்து கொண்ட போட்டி) கருதப்படும் இரு அணிகளின் இரண்டாவது போட்டிக்குச் சற்று எதிர்பார்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது. காரணம் சென்னையின் நிலை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையுடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டிகளில் சவாலில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்பதே இதற்கு முக்கியக் காரணம்.

ரசிகர்களுக்காக

சென்னை அணி இனி வரும் நான்கு போட்டிகளிலும் வென்றாலும் கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்துத் தோற்றால்தான் சென்னைக்கான பிளே ஆஃப் வாய்ப்பு உருவாகும். எனவே பிளே ஆஃப் வாய்ப்பு இனி சென்னையின் சிறந்த ஆட்டத்தைப் பொறுத்து மட்டும் இல்லை. பிற அணிகளின் மோசமான ஆட்டத்தையும் பொறுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக வெற்றியிலும் தோல்வியிலும் தொடர்ந்து ஆதரவு அளித்த ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சென்னை அணி ஆட வேண்டும். சாம்பியன் அணியின் உறுப்பினர்கள் என்னும் நம்பிக்கையுடன் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் செயல்பட்டால், பிளே ஆஃபுக்குப் போகாவிட்டாலும் ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தி தந்த மனநிறைவுடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடை பெறலாம்.

உத்தேச அணிகள்

சென்னை: ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளசி, அம்பத்தி ராயுடு, ஜகதீசன், தோனி, ஜடேஜா, தீபக் சாஹர், சார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா, ஹேசில்வுட், இம்ரான் தாஹிர்

மும்பை: ரோஹித் ஷர்மா, குவிண்டன் டி காக், சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ட்ரென்ட் போல்ட், பூம்ரா, ராகுல் சாஹர், கோல்டர் நைல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.