close
Choose your channels

ரஜினியின் மனதை மாற்றிய நல்லவர் யார்? கவுதம் மேனன்

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016ஆம் ஆண்டு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் முதலில் இந்த படத்தை இயக்கவிருந்தவர் கவுதம் மேனன் தானாம். தாணுவுடன் ரஜினி வீட்டிற்கு சென்று கவுதம் மேனன் கூறிய கதை தற்போது விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதைதான். கதையை கேட்டவுடன் இந்த படத்தில் நடிக்க காலையில் ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த் பின்னர் திடீரென மாலையில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதுகுறித்து இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியபோது, 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதையை ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதால் நானும் தாணுவும் இந்த படத்தை எப்படி உருவாக்குவது என்ற ஆலோசனையில் இருந்தோம். ஆனால் திடீரென மாலையே இந்த படத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டதாக எனக்கு தாணுவிடம் இருந்து தகவல் வந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் யாரோ ஒரு நல்லவர் ரஜினியின் மனதை மாற்றியுள்ளார் என்பது மட்டும் எனக்கு புரிந்தது' என்று கவுதம் மேனன் கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து கவுதம் மேனன் கூறியபோது, அமெரிக்காவில் சிஐஏ, இந்தியாவில் ‘ரா’ உளவு ஏஜென்ட்கள் போல் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பெரிய நாட்டிடமும் ஒரு அமைப்பு உள்ளது. இந்த அமைப்புதான் பாதுகாப்பு வளையத்துக்குள் அரசாங்கத்தைக் கொண்டுவருகிறது. அரசாங்கத்தின் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைத் தாண்டி அதிகாரபூர்வமற்ற ஒரு அணி, அரசாங்கத்துக்காக எப்போதுமே பணிபுரியும். சில முக்கியமான பணிகளுக்கு மட்டுமே அரசாங்கம் இவர்களைப் பயன்படுத்தும். அந்த மாதிரியான ஒரு டீமைப் பற்றிய படம்தான் ‘துருவ நட்சத்திரம்' என்று கூறியுள்ளார்.

விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், சுரேஷ் மேனன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.