close
Choose your channels

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: மும்பை – சென்னை மோதல்

Saturday, September 19, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையைச் சமாளிக்குமா சென்னை?

உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அபுதாபியில் துவங்குகிறது. முதல் போட்டியில் அதிக முறை கோப்பை வென்ற ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பல மாத தாமத்துக்குப் பின் தொடங்கும் இந்தப் போட்டியில் நான்கு முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் என மொத்தமாக 8 அணிகள் பங்கேற்கின்றன.

பரம எதிரிகள்

இன்று அபுதாபியில் நடக்கும் முதல் லீக் போட்டியில் ஐபிஎல் அரங்கில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை ஐபிஎல் தொடரில் இல்லாத அளவு இந்தாண்டு ஐபிஎல் தொடர் எல் கிளாசிகோ என்று சொல்லப்படும் டாப் 2 அணிகளுக்கிடையிலான போட்டியுடன் தொடங்குவது மிகச் சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது.

இரட்டை அடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இருவரும் பங்கேற்காதது அவ்வணிக்குப் பெரியபின்னடைவாக இருக்கும். ஹர்பஜன் சிங் இடத்தை மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரெய்னா இல்லாத காரணத்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குப் பொறுப்பு அதிகரித்துள்ளது.

கைகொடுப்பாரா தல?

அதே போல கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். இதனால் அவர் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காரணத்தால் நீண்டகாலமாக அவரைத் துரத்திய நெருக்கடி இல்லாமல் தற்போது திறமையை நிரூபிக்கலாம். ஆனால் பேட்டிங் வரிசையில் தோனி முன்னதாகக் களமிறங்கும் சூழலும் உள்ளது. மற்றபடி சீனியர் வீரர்களான வாட்சன், அம்பதி ராயுடு, ஃபாப் டூபிளசிஸ் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தலாம்.

மிகப் பெரிய பலம்

சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிர், சாவ்லா கைகொடுப்பார்கள் என நம்பலாம். இவர்களுடன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாகப் பந்து வீசினால் மும்பை அணிக்குச் சிக்கல்தான். சென்னை அணியின் மிகப் பெரிய பலமே கேப்டன் தோனியின் நுணுக்கமாக கிரிக்கெட் மூளைதான் எனலாம். போட்டியின் போக்கு ஏற்ப வியூகங்களை வகுத்துச் செயல்படுவதே முதல் போட்டியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும்.

சாதகம்

மும்பை அணியின் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுவது அந்த அணியின் பேட்டிங் வரிசை. டாப் ஆர்டரில் ரோஹித், குவிண்டன் டிகாக் ஆகியோரை விரைவாக வெளியேற்றவில்லை என்றால் நிச்சயம் தொல்லைதான்.
இவர்கள் இருவருமே அதிரடி காட்டுவதில் கில்லாடிகள். மேலும் மிடில் ஆர்டரில் போலார்டு, ஹார்திக் பாண்டியா என அதிரடி காட்ட காத்திருக்கின்றனர். பவுலிங்கிலும் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான அபுதாபியில் கூல்டர் நைல், ஜஸ்ப்ரீத் பும்ரா, ட்ரென்ட் போல்ட் என மும்பை அணிக்கு அதிக பவுலர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆடுகளம் எப்படி?

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி ஆடுகளம் டி-20 போட்டியாக இருந்தாலும் அதிக ரன்கள் சேர்க்க ஏதுவான ஆடுகளம் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு நடந்த டி-20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியின் சராசரி ஸ்கோர் வெறும் 140 ஆகவே உள்ளது. எதிர்பார்க்கப்படும் லெவன் அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஃபாப் டூபிளசிஸ், தோனி, கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, பியூஸ் சாவ்லா, தீபக் சகார், சார்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் ஷர்மா, குவிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், கெய்ரன் போலார்டு, ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர் நைல், ராகுல் சகார், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.