close
Choose your channels

நிர்பயா  வழக்கு - பாலியல் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு ரத்து

Saturday, February 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிர்பயா  வழக்கு - பாலியல் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு ரத்து

 

நிர்பயா பாலியல் வழக்கில் தூக்குத் தண்டனை கைதியான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப் பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. இதில் முகேஷ் குமார் சிங், மற்றும் வினய் சர்மா இரண்டு பேரும் கருணை மனுக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி இருந்தனர். இந்தக் கருணை மனுக்களால் ஜனவரி 22 ஆம் தேதி நிறைவேற்றப் பட வேண்டிய தூக்குத் தண்டனை இன்று வரைக்கும் நிறைவேற்றப் படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட இருந்தது. தண்டனையை நிறைவேற்று வதற்கான ஏற்பாடுகளை திகார் சிறைத் துறை நிர்வாகம் மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளியான முகேஷ் குமார் சிங் தனது கருணை மனு டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது, எனவே தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார்.

முகேஷ் குமார் சிங்கின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோர்டில் மனு விசாரணையில் இருக்கும்போது தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனக் குறிப்பிட்டதோடு, சிறைத் துறை நிர்வாகத்தை இது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. இதனை அடுத்து திகார் சிறைத் துறை நிர்வாகம் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படாது என்ற ரீதியில் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது டெல்லி துணை நிலை ஆளுநர் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவினை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் குடியரசு தலைவருடன் தொடர்பு கொண்டு கருணை மனுவினை ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். முகேஷ் குமாரின் கருணை மனுவினை தள்ளுபடி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகமும் கேட்டுக் கொண்டதை அடுத்து குடியரசு தலைவரும் கருணை மனுவினை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஒருவரின் கருணை மனு தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில் திகார் சிறை துறை நிர்வாகம் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு அளிக்குமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. மேலும், குடியரசு தலைவர் ஒரு கருணை மனுவினை ரத்து செய்த நாளில் இருந்து 14 நாட்களுக்குப் பின்னரே தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் என்ற அடிப்படையில் தூக்குத் தண்டனையானது பிப்ரவரி 1 ஆம் தேதி நிறைவேற்றப் படும் என திகார் சிறை துறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று தண்டனை நிறைவேற்றபட இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொருவரான வினய் சர்மா என்னுடைய கருணை மனு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது என்று நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு விசாரணை செய்யப் பட்டு வந்த நிலையில் நேற்று மாலை திகார் சிறை துறை நிர்வாகம் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படாது என்று செய்தி வெளியிட்டது. தற்போது குடியரசு தலைவர் வினய் சர்மாவின் கருணை மனுவினை ரத்து செய்துள்ளார்.

தண்டனையை தள்ளிப் போடுவதற்காக குற்றவாளிகள் கருணை மனுக்களைக் காரணம் காட்டுகின்றனர் என்று நிர்பயாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது பொது மக்களும் தற்போது குற்றம் சாட்டி வருகின்றனர். 4 பேரில் 2 பேர் அளித்திருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்ட நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் என்று சிறை துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒருவருக்கு 17 வயதே ஆன நிலையில், 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.