close
Choose your channels

'ரஜினிமுருகன்' திரைவிமர்சனம்

Thursday, January 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ரஜினிமுருகன்' - ரசிக்க வைத்த எண்டர்டெயின் படம்

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த படம் இதுதான். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தை கமர்ஷியலாக கொடுத்த இயக்குனர் பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்கிய படம்தான் 'ரஜினிமுருகன்' இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

மதுரையில் பேரும் புகழோடும் வாழ்ந்து வரும் பெரியவர் ராஜ்கிரண். இவருடைய பேரனும் பேராசிரியர் ஞானசம்பந்தனின் மகனுமான சிவகார்த்திகேயன், சிறுவயதில் இருந்தே கீர்த்தி சுரேஷை காதலித்து வருகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் அப்பாவிற்கும் கீர்த்தி சுரேஷின் அப்பாவிற்கும் சிறுவயதில் ஒரு சின்ன பிரச்சனை காரணமாக தகராறு வந்து இருவரும் பகைவர்களாக மாறிவிடுகின்றனர். இந்நிலையில் பெரியவர்களாகும் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷின் காதலை தொடர, கடைசியில் எப்படி பெற்றோர் சம்மதத்துடன் சேர்கிறார்கள் என்பதை காமெடி காட்சிகளுடன் விளக்கும் கதைதான் 'ரஜினிமுருகன்'. இதனிடையே ராஜ்கிரணின் இன்னொரு பேரன் நான் என்று கூறிக்கொண்டு வரும் சமுத்திரக்கனி சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று தகராறு செய்ய, அந்த பிரச்சனையை நண்பன் சூரியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் எப்படி சமாளிக்கின்றார் என்பதுவும் மீதிக்கதை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றி ஹீரோவாக மாற்றிய பொன்ராமுக்காக சிவகார்த்திகேயன் சிரத்தை எடுத்து நடித்த படம். சூரியுடன் காமெடி, கீர்த்தி சுரேஷுடன் காதல், ராஜ்கிரணுடன் பாசம், சமுத்திரக்கனியுடன் மோதல் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறிவிட்டார். இந்த படம் இவருக்கு இன்னொரு வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக இருப்பதுடன் நன்றாக நடிக்கவும் செய்திருக்கின்றார். சிவகார்த்திகேயனை மனதால் காதலித்தாலும் தந்தைக்காக சிவகார்த்திகேயனை வெறுப்பதுபோல் நடிக்கின்றார். ஆனால் ஒரு கட்டத்தில் தந்தையும் சம்மதித்தை அறிந்து அதன் பின்னர் உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்

ராஜ்கிரண் இதேபோன்ற பாசக்கார தாத்தாவாக ஒருசில படங்களில் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இந்த படத்தில் அவருடைய நடிப்பை பார்க்க சலிக்கவில்லை என்பதே ஒரு ஆறுதல். வெளிநாட்டில் இருக்கும் தனது மகன்களை வரவழைக்க பிணமாக நடிப்பது ஆடியன்ஸ் எதிர்பாராத ஒரு திருப்பம்

சமுத்திரக்கனியின் வில்லத்தனத்தில் புதுமை எதுவும் இல்லை. வில்லனாக தொடர்ந்து நடிப்பது குறித்து சமுத்திரக்கனி கொஞ்சம் யோசித்தால் நல்லது.

சூரியின் ஒன்லைன் காமெடி, அவ்வப்போது அவர் தரும் கவுண்ட்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை

இயக்குனர் பொன்ராம் ஒரு சிறிய கதை, அதில் கொஞ்சம் திருப்பங்கள் ஆகியவற்றோடு முழுக்க முழுக்க காமெடியை நம்பி ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார். வீட்டில் பொங்கல் கொண்டாடிவிட்டு ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் படத்தை பார்க்க வரும் ஆடியன்ஸ்களை ஏமாற்றாமல் வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்

டி.இமான் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். என்னமா இப்படி பண்றீங்களேம்மா`, ஆவி பறக்கிற டீக்கடை`, உன்மேல ஒரு கண்ணு` ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்து ஆட்டம் போடுகின்றனர். பின்னணி இசையிலும் அவர் குறை வைக்கவில்லை.

மதுரையை மிக அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன். முதல் பாதியில் காமெடி, காதல் காட்சிகள் கொஞ்சம் அதிகம். இதனால் படத்தின் நீளம் அதிகமாக உள்ளது. எடிட்டர் இவற்றில் கொஞ்சம் கத்தரியை பயன்படுத்தியிருக்கலாம்.

அழுது வடியும் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் பண்டிகை நாளில் சந்தோஷமாக இருக்க வைத்த படம்.

மொத்தத்தில் 'ரஜினிமுருகன்' ரசிகர்களின் ரசனையை புரிந்தவன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.