close
Choose your channels

றெக்க திரை விமர்சனம் : கொஞ்ச தூரம் பறக்கிறது

Friday, October 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதியின் முதல் மாஸ் முயற்சி என்பதே றெக்கைக்கு ரசிகர்களின் மனதில் கிடைத்த மிக பெரிய எதிர்பார்ப்பு. இந்த முதல் முயற்சியை அவர் ஒப்படைத்திருப்பது 'வா டீல்' பட இயக்குனர் ரத்தின சிவாவிடம், எந்த அளவு இருவரும் வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

படத்தின் ஆரம்பித்திலேயே தாதா காபிர் கான் இன்னொரு தாதாவான ஹரிஷ் உத்தமனின் தம்பியை கொல்கிறார் அவரை தக்க சமையத்தில் பழி வாங்குவேன் என்று பின்னவர் சபதமெடுக்கிறார். விஜய் சேதுபதி தந்தை கே எஸ் ரவிக்குமார் மற்றும் தாய் தங்கையுடன் கும்பகோணத்தில் வசிக்கிறார். நண்பன் சதீஷுடன் சேர்ந்து மாப்பிள்ளையை பிடிக்காத மணப்பெண்களை கடத்தி இஷ்ட பட்டவர்களுடன் சேர்த்து வைப்பதில் பெயர் போனவர்கள். ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமனின் திருமணத்திலேயே மணப்பெண்ணை கடத்தி விடுகிறார்கள் ஆனால் ஹரிஷ் தன் கொடூரத்தை காட்டாமல் விட்டு விடுகிறார். விஜய் சேதுபதியின் தங்கை கல்யாணத்தன்று சதிஷ் செய்யும் ஒரு சில்மிஷத்தால் மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் ஹரிஷ் ஹீரோவிடம் மதுரையிலிருக்கும் மந்திரியின் மகளான லட்சுமி மேனோனை கடத்திவராவிட்டால் தங்கையின் கணவரை கொன்றுவிடுவதாக மிரட்ட என்ன நடந்தது என்பதை சற்று விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு கனமான திரைக்கதை காட்சியமைப்பு கொண்ட 'சேதுபதி' படத்திலேயே மாஸ் கெத்து காட்டிவிட்டார். அதை ஒப்பிடுகையில் றெக்க அவருக்கு ஒரு சவாலே அல்ல சும்மா ஜஸ்ட் லைக் தட் ஊதி தள்ளுகிறார். விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் கூட பொருந்தாத சண்டைக்காட்சிகள் அமைத்து பயிற்சியாளர் ராஜசேகர் தான் அவரையும் நம்மையும் மண்டை காய வைக்கிறார். லட்சுமி மேனனுக்கு சற்று லூசுத்தனமான வேடம் கடைசியில் அதற்க்கு காரணம் சொன்னாலும் ஏனோ அவர் கதாபாத்திரம் அவ்வளவாக ஓட்ட வில்லை. பாடல் காட்சிகளில் நல்ல அழகு. சதிஷ் இருக்கிறார் ஆனால் காமெடிக்கு தான் பஞ்சமோ பஞ்சம். ரவிக்குமார், ஸ்ரீரஞ்சனி, கபீர் கான் மற்றும் ஹரிஷ் உத்தமன் நடிப்பில் குறை சொல்ல ஏதும் இல்லை. டாக்டராக இருந்து மனநோயால் பாதிக்கபட்ட கிஷோர் மற்றும் அவருக்கு காதலியாக வரும் நடிகையின் நடிப்பு சபாஷ் சொல்ல வைக்கிறது.
படத்தில் பெரிதும் கவரும் பகுதி சிறு வயது விஜய் சேதுபதி ஒரு பருவ பெண்ணிடம் பாலிய கடித்தால் கொள்வதும் அது எப்படி அவர்கள் இருவர் மற்றும் கிஷோர் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது என்கின்ற விஷயம் சுவாரசியம்.

டி இமானின் இசையில் பாடல்கள் அவருடைய வழக்கமான பாணியென்றாலும் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையும் நன்றாக உள்ளது. தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் பிராவின் கே எல் இன் எடிட்டிங்கும் படத்திற்கு பலம். இயக்குநர் ரத்தின சிவா அரைத்த மாவையே அறைத்திருக்கிறார் அதிலும் காட்சி அமைப்பும் பழைய பட பாணியிலேயே இருக்கிறது. மதுரைக்கு தனியாளாக சென்று மந்திரி பெண்ணை தூக்குவது, முப்பதுக்கும் மேற்பட்ட அடியாட்களை கையில் வாரி வாரி தூக்கி போடுவது, திடீரெனெ லட்சுமி மேனன் விஜய் சேதுபதியை ஏற்கனவே காதலித்தவர் என்று காதில் கூடை கூடையை பூ சுற்றியிருக்கிறார். விஜய் சேதுபதியின் மாஸை இவர் றெக்க கட்டி பறக்கவிட்டிருக்கிறாரா அல்லது இறக்கி விட்டிருக்கிறாரா என்பதை படத்தின் வசூலே தீர்மானிக்கும்.

விஜய் சேதுபதி படத்திற்கென்று நாம் மனதில் வைத்திருக்கும் எதிர்பார்ப்பை தூர தள்ளி வைத்து விட்டு பார்த்தால் றெக்க பெரிய ஏமாற்றத்தை தராது என்பது நிஜம்.

மதிப்பெண் : 2. 75

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.