close
Choose your channels

எனக்கு முதல்வர் கொடுத்த பணியை சிறப்பாக செய்வேன்: நடிகர் நாசர்

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்வேன் என்று நடிகர் நாசர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் நாசருக்கு தற்போது கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’ என்ற விருதை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது

இந்த விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகர் நாசர், இயக்குநர் கரு பழனியப்பன் ஆகியோர் உள்ளனர். இந்த குழுவால் தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு 10 லட்ச ரூபாய் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும். பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி.

கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு நாசர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.