close
Choose your channels

உண்மையான டைட்டானிக் பேரழிவு மாதிரியே இருக்கு… சோகத்தை பதிவிட்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!

Tuesday, June 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உதிரிபாகங்களை பார்வையிடுவதற்காக சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து காணாமல்போன 5 பேர் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர்கள் ஒருவேளை இறந்து இருக்கலாம் என்று ஓஷன் கேட் நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து ‘டைட்டானிக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த 1912 அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த டைட்டானிக் கப்பல் கடும் குளிருக்கு நடுவில் மிதந்து வந்த பனிப்பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு மூழ்க ஆரம்பித்த அந்தக் கப்பல் 15 ஆம் தேதி விடிவதற்குள் 3 மணி நேரத்திற்குள்ளாகவே கடலுக்குள் காணாமல் போனது. இந்த இடம் தற்போது கனடாவின் நியுஃபவுண்ட்லாண்ட் எனும் இடத்தில் இருந்து கடலுக்குள் 640 கிலோ மீட்டர் தூரத்தில் காணப்படுகிறது.

இந்தப் பகுதியை பார்வையிடுவதற்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளை பாதுகாப்பதற்கும் ஓஷன்கேட் எனும் நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக அவ்வபோது சாகசவீரர்கள் டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டும் வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பாகிஸ்தான் தொழில் அதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத், பிரிட்டிஷ் சாகச வீரர் ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பிரெஞ்சு ஆழ்கடல் ஆய்வாளர் பால் ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தனர்.

அவர்கள் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன நிலையில் அவர்களைத் தேடும் பணி தற்போது தீவிரம் அடைந்திருக்கிறது. ஆனால் டைட்டன் நீர்மூழ்கிகப்பலில் வெறுமனே 96 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருந்ததால் அவர்கள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

உண்மையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் என்பது ஒரு போர் கப்பலை போன்றதல்ல. இது சுற்றுலாவிற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றும் மேலும் எந்தவொரு கடர்சார் அமைப்பிலும் இந்த டைட்டன் நிர்மூழ்கி கப்பலுக்கு சான்றிதழ் பெறப்படவில்லை என்றும் தற்போது உலக அளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மேலும் 22 அடி நீளம், 9 அடி அகலம், 8 அடி உயரம் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பு குறித்து தற்போது இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் குற்றம் சாட்டியுள்ளார். காரணம் இந்த கப்பல் 3,500 மீ ஆழம் கொண்ட கடலுக்குள் பயணிக்கும்போது அதிக அழுத்தம் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் சிறிய தவறு நடந்தாலும் விலாசம் இல்லாமல் ஆகிவிடுவோம். மேலும் முன்பு டைட்டானிக் விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

நான் அந்த இடத்திற்கு 33 முறை சென்றுள்ளேன். அந்த இடத்தில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன் என்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருக்கிறார். அவரது கருத்து தற்போது பலரிடையே பீதியை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சினிமா துறையை சேர்ந்தவர் என்பதைத் தாண்டி அவர் ஒரு நீச்சல் வீரராகவும் கடல் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். மேலும் தற்போது நடந்த விபத்தில் சிக்கி காணாமல் போன ஆழ்கடல் ஆய்வாளர் பால் ஹென்றி நர்ஜோலெட் இவருடைய நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

தன்னுடைய 25 வருடகால நண்பர் காணாமல் போன நிலையில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் மூழ்கிய இடத்தைக் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.