close
Choose your channels

சிதம்பரம் ரகசியம் என்றால் என்ன??? வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் அரிய தகவல்கள்!!!

Saturday, June 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிதம்பரம் ரகசியம் என்றால் என்ன??? வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் அரிய தகவல்கள்!!!

 

நம்முடைய தமிழர் பண்பாட்டில் ஒரு வழக்கம் உண்டு. எதை ஒளித்து வைத்தாலும் அதற்கு பெயர் சிதம்பர ரகசியம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த சிதம்பரத்தில்? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. தமிழர் கலை, பண்பாடு, வாழ்க்கைக்கான தத்துவத்தை சொல்லும் விதமாக சிதம்பரம் நடராஜர் சிலை வடிவமைக்கப் பட்டு இருக்கிறது எனப் பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. மனிதனது வாழ்க்கைக்கான தத்துவத்தை எப்படி சிலை சொல்லிக் கொடுக்க முடியும் என்ற கேள்வி எழலாம். இது மதம் சம்பந்தப் பட்ட விஷயமாக இருக்கிறதே என்ற பகுத்தறிவாளர்கள் ஒருபக்கம் ஒதுங்கிப் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Albert Einsteins உடைய Theory of General Realtivity கருத்துகளை பொதுவாக கேள்விப்பட்டு இருப்போம். இந்த தியரியைத்தான் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி என்று தமிழில் குறிப்பிடுவது உண்டு. அதாவது சித்தர்கள் சொல்கிற மாதிரி “அண்டமும் பிண்டமும் ஒன்று” அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் இருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துரும்பு மனிதர்கள். பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பால் பிறந்தவர்கள். அந்தப் பிரபஞ்சத்தோடு நெருங்கியத் தொடர்புடையவர்கள் என்ற விதிமுறைகளை நமக்கு எடுத்துச் சொல்லும் விதமாக சிதம்பரத்தில் நடராஜர் நடனமாடிக்கொண்டு இருக்கிறார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர்.

பொதுவாக இந்து மதத்தில் ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. தில்லையில் யாருக்கு முதல் மரியாதை என்ற போட்டி வந்தபோது சிவனும் காளியும் நடனப்போட்டி வைத்துக் கொண்டார்களாம். அந்தப் போட்டியில் சிவன் மிகவும் ஆக்ரோஷமாக ஆடியும் காளியை வெல்லமுடியவில்லை. கடைசியில் ஒரு காலை மேலே தூக்கி ஆடியபோது அப்படி ஆட முடியாத நிலையில் காளி தோற்று போனாள் என்று சொல்லப்படுவது உண்டு. உண்மையில் ஆணாதிக்கத்தை வலியுறுத்தும் இந்தப் புராணக்கதை எந்தக் காலக்கட்டத்தில் எந்த பின்னணியில் இருந்து சொல்லப்பட்டது என்பதையும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டுக்கின்றனர்.

கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகப் பிரபஞ்சத்தைப் பற்றியும் அதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்தும் தமிழர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல பிரபஞ்ச இயக்கத்தோடு தொடர்புடைய காலத்தையும் நேரத்தையும் கட்டுப்படுத்த இயலும் என்ற வித்தையையும் எடுத்துக் காட்டி இருக்கின்றனர். 5 லட்சம் மணி நேரத்தையும் 5 நிமிடமாக இந்த பிரபஞ்ச இயக்கத்தில் கணக்கிட முடியும் என்பது போன்ற காலத்தின் அளவீடுகளை மிக அழகாக ஒரு சிலையில் வடித்து இருக்கிறான் தமிழன். பிரபஞ்சத்தின் வடிவம் போன்றே நடராஜன் சிலையின் வடிவமும் இருப்பதாக சில அறிவியல் ஆய்வுகள் வெளிவந்து இருக்கிறது எனக் கூறப்படுவதும் உண்டு.

அண்டம் – பிண்டம் இந்தக் கருத்துகளைத் தவிர, தில்லை- சிதம்பரம் என்ற ஊர்ப் பெயருக்குள்ளும் ரகசியம் ஒளிந்து இருக்கிறது என விளக்கம் அளிக்கிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர். அதாவது “தில்லை காளி எல்லைக்கு அப்பால்” என்ற பழமொழி சொல்லப்படுவது உண்டு. சிவனுக்கும் காளிக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக காளி தோற்றுபோன பின்பு சிதம்பரத்தின் எல்லைக்குள் அவள் பெருமை செல்லாது என்பதைக் காட்டுவதற்காக இந்தப் பழமொழி சொல்லப்படுவது உண்டு. காளியிடம் தனது வீரத்தைப் பறைசாற்றுவதற்காக சிதம்பரம் நடராஜர் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு நடனமாடி யிருந்தார். அதேபோன்ற சிலை வடிவம் தஞ்சை கோபுரத்திலும் மதுரை மீனாட்சி அம்மனின் கோபுரத்திலும் காணப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கோபுரங்களிலும் இருக்கும் நடராஜர் இப்படி ஆக்ரோஷமாக காட்சி அளிக்கவில்லை.

சிதம்பரத்தில் இருக்கும் சிலை ஆனந்த தாண்டவமாகவும் தஞ்சையிலும் மதுரையிலும் ஊர்த்துவ தாண்டவமாகவும் இருக்கிறது. லிங்க வழிபாட்டின்படி பார்க்கும்போது ஆணின் குறி விறைப்பு தன்மையோடு இருப்பதைக் குறிக்கும் வழிபாட்டு நிலை. விறைப்பு இல்லாமல் இருக்கும் நிலையை குறிப்பிடும் நபும்சக லிங்கம் என்ற சொல்லும் தமிழில் இருக்கிறது. தமிழகத்தில் இப்படியான சிலைகளும் இருக்கிறது. ஆனால் நடராஜன் சிலை விவகாரத்தில் காளி என்பவள் விலக்கப் பட்டவளாக இருக்கிறாள் என்பதைத்தான் தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.

தில்லை சிதம்பரத்தில் “திருக்காமக் கோட்டத்து பெரிய நாச்சியாருக்கு சாத்தியருள“ என்றொரு கல்வெட்டு ஒன்று உள்ளது. அதேபோல மதுரை மீனாட்சி அம்மனின் கோவிலிலும் ”திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாச்சியார் கோட்டம்” என்றொரு கல்வெட்டு கிடைக்கிறது. கோட்டம் என்பது ஆட்சி எல்லைகளைக் குறிக்கும் சொல். கடவுள்களின் ஆட்சி எல்லைக்குட் பட்ட பகுதிகளை கடவுள் பெயரால் அழைப்பது வழக்கம். ஆனால் பெரும்பாலும் காளிக்குரிய எல்லைகளை கூறும்போது காமம் என்ற சொல் குறிப்பிடப் படுகிறது.

இந்தச் சான்றுகளை வைத்து பார்க்கும்போது தில்லையும் பழங்காலத்தில் காளி தேவியின் கோயிலாக இருந்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். காமம் என்பது காமாட்சியைக் குறிக்கும் சொல். கல்வெட்டில் உள்ளது போல “திருக்காமக் கோட்டத்து பெரிய நாச்சியாருக்கு” என்ற சொல் காமாட்சியையே அடையாளப்படுத்து கிறது. காமாட்சி, சிவன் இரண்டு பெயர்களையும் இணைத்து சிவகாமி ஆக்கி சிவனுக்கு மனைவியாக மாற்றியிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் வலுவான ஆதாரத்தை முன்வைத்து வருகின்றனர். அதாவது சிதம்பரம் காளியின் கோயிலாக இருந்து பின்னாட்களில் காளியை ஓரம் கட்டிவிட்டு சிவனுக்கு துணைக் கடவுளாக உருவாக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.