close
Choose your channels

மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்? விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் வேதனை..!

Saturday, December 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவரால் நிமிர்ந்து உட்கார முடியாத அளவிற்கு அவர் இருந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கேப்டனின் இந்த நிலையை பார்த்து தனது சமூக வலைதளத்தில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனையுடன் செய்த பதிவு பின்வருமாறு:

கேப்டன்...

ஆரம்பத்துல எந்தக் கப்பல்ல கேப்டனா இருந்தாரு விஜயகாந்துன்னு கிண்டல் பண்ணியவங்க... பின்னர்தான் புரிந்துகொண்டனர் அவர் சினிமாவில் சிதைந்து கிடந்த பல கப்பல்களை சரிசெய்தவர் என்று.

அதன்பிறகு கிண்டலடித்த அதே வாய்கள் கேப்டன் கேப்டன் என வாயாரக் கூப்பிடத் தொடங்கியது.

நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் போது அச்சங்கத்தை தலை தூக்கி நிறுத்தியவர் அவர். கலை நிகழ்ச்சியொன்றில் ரஜினி கமல் என நட்சத்திரப் பட்டாளங்களைக் கையாண்டு கடனையடைத்தவர்.

சொன்னதை செய்து காட்டுவதையே இலட்சியமாக வைத்திருந்தவர். நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில், வரிசையாக பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல வந்தபோது பல கலைஞர்கள் பஸ்ஸிலா? என தயங்கி நின்ற போது, ஒரு பேருந்திலிருந்து கையசைக்க "சூப்பர் ஸ்டாரே பேருந்தில்தான் போகிறாரா? நாமும் ஏறிக்கொள்வோம்" என பேருந்துகள் நிறைந்தன.

இதன்பின்னால் விஜயகாந்தின் அதிபுத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது என சொல்லக் கேள்வி. எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறந் தயங்குவார்கள் என அறிந்திருந்த விஜயகாந்த் சூப்பர் ஸ்டாரிடம், " நீங்க முதல்ல பேருந்தில் ஏறிட்டா அப்புறம் அனைவரும் ஏறிடுவாங்க" என சொல்லியிருக்கிறார். "அதற்கென்ன ஏறிட்டாப் போச்சு" என தனக்கேயுரிய பாணியில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தவிர, நடிகர் சங்கத்தில் ஒரு நடிகர் மீதோ நடிகை மீதோ புகார் வந்தால் அழைத்து விசாரிப்பார். சம்பந்தப்பட்ட நடிகர் நடிகை மீது தவறு இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டு சுமூகமாக அந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அனுப்பி வைப்பார். நடிகர் நடிகைகள் மீது தவறில்லை என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நடிகர் சங்கம் வந்துதான் தீர்வு காண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்பார்.

தன் உடன் பிறந்த சகோதரர்களாய் ஒவ்வொரு உறுப்பினரையும் மதித்தவர்.

நல்ல மனிதன் என அனைவரிடமும் பெயரெடுத்தவர்.

படப்பிடிப்புத்தளத்தில் அனைவருக்கும் சமமான , தரமான உணவு... யார் வந்தாலும் அடைக்கலம் என தன்னிகரற்ற மனிதராய் விளங்கியவர் கேப்டன்.

எல்லோரும் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க மறுத்த போது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டவர்.

காவிரியில் நீர் தர கர்நாடகா மறுத்தபோது, அம்மாநிலத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவோம் என குரல் கொடுத்து நெய்வேலி போராட்டம் நடந்தது. அப்போது 5,000 நடிகர்களை ஒன்றுதிரட்டி போராடியவர்.

அரசியலுக்கு முழுக்க தகுதியான மனிதர்... தகுதியான நேரத்தில் களமிறங்கி அதில் தனது கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியவர் உடல் நலத்தை விட்டுவிட்டார்.

உடல் நலம் பேணாததற்கு அரசியலே மிக முக்கிய காரணமாகிவிட்டது. எனக்கெல்லாம் மாபெரும் நம்பிக்கை இருந்தது கேப்டன் பழையபடி சிங்கமாக கர்ஜிக்க வந்துவிடுவார் என்று.

ஆனால் சமீபத்திய அவரது காணொளியைப் பார்த்தபோது கண்ணீர்தான் வந்தது. பாழாப்போன அரசியல் அவரை இப்படி நம்மை பார்க்க வைத்துவிட்டதே எனக் கலங்கிப் போனேன்.

தவிடு பொடியாக்கும் ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைப் போல இருந்தவரை வீல் சேரில் வைத்து அரசியல் செய்ய அழைத்து வந்த போது நெஞ்சே உடைந்துவிட்டது.

மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்? என குமைந்து போனேன்.

இந்த சமூகத்தோடு, அரசியல் எதிரிகளோடு, தன் உடல் நலத்தோடு எவ்வளவோ போராடிவிட்டார்! இன்னுமா போராட வேண்டும்? தான் எந்நிலையிலிருந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது சரியல்ல.

இப்போதுதான் தலைமை மாறிவிட்டதே... இனியேனும் அவரை வதைக்காமல் பாதுகாத்து வைப்போம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு நம்மோடிருக்கட்டும் என்பதே என் ஒரே ஆசை.

கேப்டன் உங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். நலமே சூழ்க உம்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos