close
Choose your channels

சூர்யா, கார்த்தியை அடுத்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு குரல் கொடுத்த தமிழ் நடிகை!

Thursday, July 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த சுற்றுச்சூழல் குறித்த புதிய விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் நடிகர் கார்த்தி வெளியிட்ட உழவன் பவுண்டேஷன் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாளே அதே அறிக்கையை சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்ததை அடுத்து பரபரப்பு இன்னும் அதிகரித்தது.

இந்த நிலையில் கார்த்தி, சூர்யாவை அடுத்து தற்போது நடிகை ஆத்மிகா இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சுற்றுச்சூழல் குறித்த விதிகள் என்ன என்று தெரிந்து கொள்ள நான் அதனை முழுமையாக படித்தேன். எனக்கு நிறைய எதிர்ப்புகள் இதில் உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இல்லை. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இல்லை என்றால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொது மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுத்தும். அதனால் என்னுடைய கருத்தை நான் அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளேன்.

இதே போல் நீங்களும் இந்த விதிமுறைகளை மறக்காமல் படித்து உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். இதைவிட முக்கியமானது என்னவென்றால் அப்படி ஒரு விஷயம் இருப்பதே பலருக்கு தெரியாது. அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 11 ஆகும். எனவே காலம் மிகவும் குறைவாக இருப்பதால் உடனடியாக அனைவரும் இதுகுறித்து உங்களுடைய கருத்தை தெரிவிப்பதோடு பிறருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஓட்டு போடுவது மட்டும் நமது கடமை கிடையாது. இது போன்ற சட்டங்கள் வரும்போது நமது கருத்தை தெரிவிப்பதும் நமது கடமையாகும். இது மிகவும் முக்கியமான விஷயம். இது நமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தயவு செய்து அனைவரும் படித்து கருத்துக்களை கூறுங்கள் என்று நடிகை ஆத்மிகா கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.