close
Choose your channels

இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன். கமல்ஹாசன்

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1ஆம் தேதியில் இருந்து ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியும் சேர்ந்து கொண்டதால் ஒருசில துறையினர் இரட்டை வரி என்ற கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திரைத்துறை உள்ளிட்ட ஒருசில துறைகள் இந்த இரட்டை வரிவிதிப்பில் சிக்கியுள்ளது.
திரையரங்குகளின் இரண்டாவது நாள் வேலைநிறுத்தம், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் திரைத்துறை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை ஆகியவை நடந்து கொண்டிருந்தாலும் இன்னும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. மேலும் இந்த பிரச்சனையில் திரையுலகின் ஒற்றுமை குறித்தும் கேள்விக்குறி எழுந்துள்ளது. ஒட்டுமொத்த திரைத்துறையே ஒருங்கிணைந்து போராட வேண்டிய இந்த தருணத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் சில முக்கிய நடிகர்கள் இந்த வரிவிதிப்புக்கு இன்னும் எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் உலக நாயகன் கமல்ஹாசன் தனது கடுமையான எதிர்ப்பை தமிழக அரசு மீது கடுமையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது.
இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
தமிழ்நாட்டைத் தவிர பிற அண்டை மாநிலங்கள் ஜிஎஸ்டி-யை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கு விலக்களித்துள்ளன.
கேரள திரைத்துறையினர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் வரிவிதிப்பு குறித்து வேண்டுகோள் விடுத்தபோது, அவர் உடனடியாக திரைப்படத் துறைக்கு இனி எந்த வரியும் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அரசுகளும் திரைத்துறைக்கு பல்வேறு சலுகைகளை செய்து தந்துள்ளன.
தமிழகம் ஊழலில் பிஹாரையே விஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக் கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்" இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.