close
Choose your channels

விஜய்சேதுபதி-மாதவன் நடிக்கும் 'விக்ரம் வேதா: திரை முன்னோட்டம்

Sunday, July 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் 'ஓரம்போ', 'வா' ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கியுள்ள நிலையில் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் 'விக்ரம் வேதா'. முதல்முறையாக விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் 'மதயானை கூட்டம்' கதிர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். வினோத் ஒளிப்பதிவில் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன்கள் பெரிய அளவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் திருப்தியான ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தபோது நடிகர் விஜய்சேதுபதி கூறியதாவது: "நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்த இடம் 'விக்ரம் வேதா' படப்பிடிப்பு தளம் தான். எனக்கு இப்படத்தில் பங்குள்ளது என நினைத்து முழுமையாக பணியாற்றியுள்ளேன். மாதவனுக்கும் எனக்கும் எது முதல் காட்சியோ, அது தான் எங்கள் இருவரையும் வைத்து முதலில் படமாக்கப்பட்டது. பெரிய படங்கள், பெரிய நடிகர்களோடு நடித்தவர் மாதவன். அவரோடு நடிக்கும் போது எப்படியிருக்கும், எதிர்வினை எப்படியிருக்கும், முதல் தடவை நம்மைக் காணும் போது என்ன பேச வேண்டும் என நிறைய யோசித்து வைத்திருந்தேன். அவர் வந்தவுடனே சாதாரணமாக அந்த இடம் மாறிவிட்டது. பழகுவதற்கு இனிமையானவர். ஒரு காட்சியைப் பற்றி எளிதாக அவருடன் விவாதிக்க முடிகிறது. நீண்ட நாள் நண்பர்கள் இணைந்து பணியாற்றினால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் அவரோடு நடித்தது இருந்தது.
இப்படத்தின் ட்ரெய்லரைக் காணும் போது நிறைய கொலைகள் எல்லாம் இருப்பது போல தோன்றும். ஆனால், அதெல்லாம் தாண்டி இது ஒரு லாலாலா படம். அவ்வளவு தூரம் வாசித்திருக்கிறோம். நிறைய எமோஷன் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புதமான படம். இப்படத்தின் எமோஷன் காட்சிகள் மின்னல் தாக்குவதைப் போன்று உங்களைத் தாக்கும்' என்று விஜய்சேதுபதி கூறினார்
இந்த படத்தில் நடித்தது குறித்து மாதவன் கூறியபோது, 'தமிழில் இறுதி சுற்று` படத்துக்கு பிறகு விக்ரம் வேதா` படத்தில் நடித்து இருக்கிறேன். விக்ரமாதித்தன், வேதாளம் கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. நான் போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி தாதா கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறோம். விஜய் சேதுபதி சிறந்த நடிகர். எளிமையானவர். இயல்பாக அனைவரிடமும் பழகக்கூடியவர்.
படப்பிடிப்புகளில் நான் எப்போதும் பரபரப்பாக இருப்பேன். டைக்ரடர் கொடுத்த வசனத்தை எப்படி பேசுவது, எப்படி நடிப்பது என்ற சிந்தனைதான் இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களை கவனிக்க மாட்டேன். ஆனால் விஜய் சேதுபதி தனக்குள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதில் கவனம் வைப்பதுடன் படப்பிடிப்பை காண வந்து இருப்பவர்களிடமும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பார். அவரது பழக்கத்தை நானும் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளேன்' என்று கூறினார்
இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் கதிர் கூறியபோது, 'இந்தப் படத்தின் கதையைப் படத்தின் இயக்குநர் புஷ்கர் -காயத்ரி என்னிடம் சொல்வதற்கு முன்பு, 'உனக்காக ஒரு கேரக்டர் இருக்கு. இதில் நீ பண்ணினால் நன்றாக இருக்கும்'னு விஜய் சேதுபதி அண்ணா என்னிடம் சொன்னார். நானும் 'புஷ்கர் காயத்ரியிடம் கதை கேட்டேன். என் கேரக்டர் பற்றி கேட்டவுடன் பிடித்திருந்ததால், நடிக்க ஓகே சொல்லிட்டேன்' என்று கூறிய கதிர், இந்த. படத்தில் ஒரு சஸ்பென்ஸானா கேரக்டரில் நடித்திருக்கிறேன். படத்தின் கதை என்னை மையமாக வைத்து நகரும்`` என உற்சாகமாகக் கூறினார் கதிர்.
'இறுதிச்சுற்று' வெற்றி படத்திற்கு பின்னர் மாதவன் நடிக்கும் படம், அதுவும் விஜய்சேதுபதியுடன் முதன்முதலில் இணைந்து நடிக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் விமர்சனம் குறித்து வரும் வெள்ளி அன்று பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.