close
Choose your channels

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த சட்டரீதியாக போராடுவேன். மன்சூர் அலிகான்

Sunday, December 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு சமீபத்தில் நடிகை கவுதமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கவுதமியை அடுத்து தற்போது நடிகர் மன்சூர் அலிகான், முன்னாள் முதல்வர் மரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செப்டம்பர் 21ஆம் தேதி வரை உடல்நலமாக இருந்த முதல்வர் திடீரென எப்படி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவார். ஒரு முதல்வர் என்றால் அவர் அருகே 24 மணி நேரமும் டாக்டர் குழு ஒன்று இருக்கும். அதையும் மீறி அவருக்கு எப்படி உடல்நலம் இல்லாமல் போகும்? அப்படியே உடல்நலம் இன்றி போனாலும் அவருடைய உடலுக்கு என்ன? கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்பதை மறைப்பது ஏன்?

எனக்கு நான்கு நாட்களாக தூக்கம் வரவில்லை. ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகனுக்கு என்ன பாதுகாப்பு? நான் வேண்டிக்கொள்வது என்னவெனில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரணை செய்ய வேண்டும். முதல்வரின் மரணத்திற்கு யாராவது காரணமாக இருந்தால் அவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

நான் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவன் தான். நான்கைந்து முறை அம்மாவை குடும்பத்துடன் நேரில் பார்த்துள்ளேன். ரொம்ப அன்பானவர், பாசமிக்கவர். அப்படிப்பட்ட ஒருவர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே முதல்வரின் மரணத்தில் நிச்சயம் மர்மம் உள்ளது. என்னுடைய குற்றச்சாட்டு என்னவெனில் ஏன் யாருமே இதுகுறித்து கேள்வி கேட்கவில்லை. 'ஏன் என்று கேள்வி கேட்கால் வாழ்க்கை இல்லை' என்று எம்ஜிஆரே பாடியுள்ளார். இது என்ன நாடா? இல்லை அடிமைகள் வாழும் தேசமா? கேள்வி கேட்க கூட முடியாதென்றால் என்ன ஜனநாயகம்? அதைவிட செத்து மடியலாமே

மருத்துவமனையில் ஐசியூ வில் அட்மிட் ஆனாலும் கண்ணாடி வழியாக பார்க்க அனுமதிப்பதுண்டு. ஆனால் ஜெயலலிதாவை கவர்னர் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காதது ஏன்? உயர்தர சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கை விடுவதற்கு அப்பல்லோ என்ன அரசியல் கட்சியா? வெறும் காய்ச்சல் என்று அட்மிட் ஆனவரை இதய நோய், நுரையீரல் நோய் என்று திடீரென சொல்வது ஏன்? அவருக்காக இதயத்தை கொடுக்க கோடானு கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கின்றார்களே.

எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சொல்லிவிட்டேன். எனது சந்தேகத்தை தீர்க்க வேண்டியது 73 நாட்கள் உடனிருந்து கவனித்த சசிகலாவும், அப்பல்லோ பிரதாப் ரெட்டியும்தான். தேவை பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன். அதோடு சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன். இவ்வாறு மன்சூர் அலிகான் முன்னாள் முதல்வர் மரணம் குறித்து கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.