close
Choose your channels

பாவனா சம்பவத்திற்கு பின்னர் அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகர்

Saturday, February 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவத்திற்கு முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் நடிகர் பிரித்விராஜ். இந்த சம்பவத்திற்காக தனது கடும் கண்டனங்களை தெரிவித்த அவர் இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீண்டு, இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகை பாவனாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரித்விராஜ், பாவனா நடிப்பில் உருவாகும் 'ஆடம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாவனாவின் தைரியத்தை பாராட்டி பிரித்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் துணிச்சல் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளதாவது:
எனது வாழ்வில் நெருக்கடியான சமயங்களில் எனக்கு மிகவும் தோள் கொடுத்தது தைரியம் தான். அந்த தைரியம் எனக்கு பெண்களிடம் இருந்துதான் கிடைத்தது. தடம் புரண்ட எனது வாழ்க்கையை சரிசெய்து நல்ல நிலைக்கு கொண்டு வந்த எனது தாய், மற்றும் 40 மணி நேர பிரசவ வலியை அனுபவித்து மயக்கமருந்து கூட இல்லாமல் சிசேரியன் செய்து குழந்தை வெளியே வரும் வரை வலியை பொறுத்துக்கொண்ட எனது மனைவி, இவர்களின் தைரியத்தை ஒப்பிடும்போது நான் ஒன்றுமே இல்லை.
இதேபோல் எனது தோழி பாவனா இன்று படப்பிடிப்புக்கு வந்துள்ள தைரியத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உங்கள் வாழ்க்கையை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே. எந்த ஒரு சம்பவமும் உங்களை கட்டுப்படுத்த கூடாது. பாவனா இன்று படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்று அவர் எடுத்துள்ள முடிவு அவரை எந்த சம்பவமும் கட்டிப்போடவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் முதிர்ச்சியின்மை காரணமாக பெண்கள் மீதான வெறுப்பை போதிக்கும் ஒருசில படங்களில் நடித்துள்ளேன். பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு தரும் காட்சிகளில் நடித்து கைதட்டல் பெற்றுள்ளேன். ஆனால் இப்போது நான் ஒரு முடிவு செய்துள்ளேன். இனிமேல் எனது படங்களில் ஒருபோதும் பெண்களை அவமதிக்கும் காட்சிகள் கண்டிப்பாக இருக்காது. எனது படத்தின் கேரக்டர்கள் பெண்களை வெறுக்கும் கேரக்டர்கள் இருந்தாலும் அந்த செயல்களை நியாயப்படுத்த விட மாட்டேன்.
ஆகவே அனைவரும் பாவனாவின் துணிச்சலுக்கு எழுந்து நின்று கைதட்டுங்கள். அவரது துணிச்சல் இனிவரும் காலங்களில் இதே போன்ற ஒரு நிலையை சந்திப்பவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கும். அவர் துணிச்சல் மிக்கவர் என்பதை நிரூபணம் செய்துள்ளார். என் அன்புத்தோழியே உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் ரசிகனாக இருப்பேன். இவ்வாறு நடிகர் பிரித்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.