close
Choose your channels

அ.இ.அ.தி.மு .க பொதுச்செயலாளரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும் நடிகை லதா அறிக்கை

Wednesday, December 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதிய அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்கள் நடித்த பிரபல நடிகை லதா, அ.இ.அ.தி.மு .க பொதுச்செயலாளரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:
என் குரு, என் ஆசான் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நான் ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று இதுவரையில் யாரும் முக்கிய முடிவினை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. மொத்தத்தில் பெரிய குழப்பங்கள் ஆட்சியில் இன்னும் நீடிப்பதாகவே நான் உணருகிறேன். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் உகந்தது அல்ல.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தோற்றுவித்து அதனை வெற்றிகரமாக நடத்தியபோது அவருக்கு அடிப்படையாக அமைந்தது 'மக்கள் செல்வாக்கு'. அவர்வழி வந்த புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் மக்கள் தங்களது வரவேற்பினை தந்தனர். தமிழக வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி பொறுப்பினை ஏற்ற இரண்டு முதலமைச்சர்களை பெற்ற கட்சி நம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சாதனையை நாம் பெற வைத்ததும் அந்த மக்கள் சக்திதான் என்பதை நாம் மறந்துவிட கூடாது.
எனவே, என்னுடைய அபிப்பிராயம், என் குரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியது போல, 'மக்கள் தீர்ப்பே- மகேசன் தீர்ப்பு' என்பதன் அடிப்படையில் முக்கிய முடிவினை எடுக்கும் காலகட்டம் இது. இனியும் காலதாமதம் செய்யாமல் அடிமட்ட தொண்டர்களில் இருந்து பொதுமக்கள் வரை ஏற்கும் விதமாக கழக பொதுச்செயலாளரை முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டுமென்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர், எம்.ஜி.ஆர் அவர்கள் வழிகாட்டிய மக்கள் சேவையையும், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் செயலாற்றிய ஆட்சி முறையும் சேர்ந்து ஒருங்கே அமையும்படி, மக்களுக்கு பணியாற்றுவேன் என உறுதிமொழி தந்து பொதுச்செயலாளர் பதவியை பொது அறிக்கையின் வாயிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.