close
Choose your channels

சென்னையை அடுத்து மதுரையிலும் நம்ம அணி போட்டியிடும்: ஞானவேல்ராஜா

Saturday, December 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா, விரைவில் 'நம்ம அணி', மதுரை விநியோகஸ்தர் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும்' என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் கூறியதாவது:

முதலில் இந்த தேர்தல் பற்றிய உட்கட்டமைப்பைச் சொல்லிவிடுகிறேன். இது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கான தேர்தல். இதே போன்ற விநியோகஸ்தர்கள் சங்கம் கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி என ஆறு இடங்களில் தனித்து இயங்குகிறது. இந்த ஆறு அமைப்பும் சேர்ந்து கூட்டமைப்பு ஒன்றும் செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ். இவர் என்ன படத்தை விநியோகம் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. நான் பதினைந்து ஆண்டுகாலமாக இத்துறையில் இருக்கிறேன். ஒரு வேளை அதற்கு முன்னர் அவர் விநியோகம் செய்திருக்கலாம். அவர் எந்த படத்தை விநியோகம் செய்தார் என்று எந்த உறுப்பினர்களுக்கும் தெரியவில்லை.

ஆனால் அவர் தான் இந்த விநியோகஸ்தர் கூட்டமைப்பின் தலைவர். அவர் அணிந்திருக்கும் உடை, பயணம் செய்யும் பயணச்சீட்டு, சாப்பிடும் சாப்பாடு, தங்கும் விடுதி என அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பவர் அன்புசெழியன். அவர் என்ன பேசச் சொல்கிறாரோ அதை மட்டும் பேசுவார். இதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். அதன் பிறகு ஏன் இந்த ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, இந்த விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பதன் பின்னணியும் காரணமும் அனைவருக்கும் புரிந்துவிடும். ஆர்கா மீடியாஸ் என்ற ஹைதரபாத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தான் பாகுபலி=2 படத்தை தயாரித்தது. இந்த நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தமிழக வெளியீட்டு உரிமையும், உலகளவில் தமிழ் மொழியில் வெளியிடும் உரிமையையும் வழங்கியிருக்கிறார்கள். அவர் உலக விநியோக உரிமையை பகுதி பகுதியாக பிரிந்து விற்பனை செய்த பிறகு தமிழகத்தின் வெளியீட்டு உரிமையை ஆஸ்கார் பிலிம்ஸி ரவிச்சந்திரன் அவர்களுக்கு வழங்க தீர்மானித்து, அதற்காக ஒரு தொகையை நிர்ணயித்து, ஒப்பந்தம் போட்டு, எட்டு கோடி ரூபாய்க்கு முன்பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்.

இந்த சூழலில் அன்புசெழியன், கே புரொடக்ஷன்ஸைச் சேர்ந்த ராஜராஜன் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஸ்ரீகிரீன் சரவணன் என்பவருக்கு இரண்டாவது ஒப்பந்தத்தை போட செய்கிறார். அதாவது ஒரு தொகையை நிர்ணயம் செய்து ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட ஒரு படத்தை மீண்டும் செகண்ட் அக்ரீமெண்ட்டை தற்போதையை தலைவரானஅருள்பதியின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இங்கு அருள்பதி தான் சார் கிங். அதன் பிறகு ஸ்ரீகிரீன் சரவணன் மூலம் கூட்டமைப்பிடம் ஒரு புகார் அனுப்பப்படுகிறது. அதில் பாகுபலி படத்தின் உரிமையை நான் தான் பெற்றிருக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்போது கூட்டமைப்பினர் ஆஸ்கார் ரவிச்சந்திரனை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள். அவருக்கு இப்பட விற்பனையிலிருந்து விலகிக் கொள்ளும் படி நெருக்கடி கொடுக்கிறார்கள். அத்துடன் நீங்கள் வாங்கிய விலையால் உங்களுக்கு நட்டம் ஏற்படும் என்று விளக்கமும் அளிக்கிறர்கள். அதற்கு ரவிச்சந்திரன் பரவாயில்லை. எது வந்தாலும் நான் எதிர்கொள்கிறேன் என்று பேசுகிறார். அவர் பாரம்பரியமாக இந்த தொழிலில் இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கட்டத்தில் இத்துறையில் ஜாம்பவனாக திகழும் ஆஸ்கார் ரவிச்சந்திரன்  மிரட்டப்படுகிறார். அவர் வேறு வழியில்லாமல் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு ஸ்ரீகிரீன் சரவணன் பாகுபலி =2 படத்தை விற்பனை செய்கிறார். கடவுள் அருளால் நல்லதொரு விலைக்கு அப்படம் விற்பனையாகிறது. அந்த படம் விற்பனையானவுடன் அன்புசெழியன், ஸ்ரீகிரின் சரவணன் அவர்களை லாக் செய்கிறார். அவரால் வசூல் செய்யப்பட்ட தொகையில் 24 கோடி ரூபாயை அன்புசெழியன் எடுத்துக் கொள்கிறார். இந்த ஏற்பாடு அனைத்தும் அந்த தொகையை அன்புசெழியன் எடுத்துக் கொள்வதற்காகத்தான் என்பதை அனைவரும் அறிவர். தமிழக உரிமை முப்பத்துநான்கு கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்ட பாகுபலி=2 எழுபது கோடி ரூபாய் அளவிற்கு ஷேர் பெற்றிருக்கிறது. இன்றைய தேதி வரைக்கும் அந்த தயாரிப்பாளருக்கு சேரவேண்டிய சுமார் பதினான்கு கோடி ரூபாய் சேரவில்லை. இது போக படத்தின் அதிகப்படியான வசூலான தொகையில் கிடைக்கும் லாபத்தொகையும் அந்த தயாரிப்பாளருக்கு கிடைக்கவில்லை. இப்படத்தின் செங்கல்பட்டு உரிமையை அருள்பதி மற்றும் படூர் ரமேஷ்  கூட்டணியினர் தான் பெற்றிருந்தார்கள்.

எந்தவொரு முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் தொடங்கினாலும் தமிழகத்திலுள்ள ஆறு விநியோகஸ்தர்கள் சங்கத்தில் ஏதேனும் ஒன்றில் யார் மூலமாகவாது புகார் கொடுக்கவைத்து, அதற்கு பஞ்சாயத்து பேசி, சுயலாபம் பார்த்துவருகிறார்கள் தற்போதுள்ள கூட்டமைப்பினர். விரைவில் அஜித் படமாக விசுவாசத்திற்கும் இது போல பஞ்சாயத்து வரக்கூடும். எனவே தற்போதுள்ள நிர்வாகத்தினர் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு, தங்களின் சுயலாபத்திற்காக பாடுபடுவதால் இந்நிர்வாகத்திற்கு எதிராக இந்த முறை நடைபெறும் தேர்தலில் நாங்கள் நம்ம அணி சார்பில் போட்டியிடுகிறோம். அத்துடன் விரைவில் நடைபெறவிருக்கும் மதுரை விநியோகஸ்தர் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் நம்ம அணி போட்டியிடும்.’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.