close
Choose your channels

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புவிற்கு ஆதரவு பெருகுவதாக கருத்துக் கணிப்பு!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் தேசிய கட்சியான பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், ஹெ.ச்.ராஜா மற்றும் நடிகை குஷ்பு போன்றோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல் முறையாகத் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காகக் களம் இறங்கி இருக்கும் நடிகை குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு அவர் அப்பகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அத்தொகுதியில் வீதி வீதியாக நடந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நடிகை குஷ்புவிற்கு இப்பகுதியில் அதிக வரவேற்பு இருப்பதாகவும் இதனால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கட்சி சார்பில் கூறப்பட்டு வருகிறது.

திமுக கோட்டையாக கருதப்பட்டு வரும் ஆயிரம் விளக்கு தொகுதியில் இதுவரை அதிமுக 4 முறையும் திமுக 6 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. அதிலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் இத்தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாக வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் நின்ற கு.க.செல்வம் 61,746 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார். அதிமுக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்ற வேட்பாளர் 52,897 வாக்குகளைப் பெற்று இருந்தார்.

ஆயிரம் விளக்குத் தொகுதிக்கான இந்தக் கணக்கெடுப்புகளைப் பார்க்கும்போது அதிமுக மற்றும் திமுகவிற்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றும் தற்போது அதிமுக, பாமக மற்றும் பாஜக கூட்டணி சேர்ந்து இருப்பதால் அப்பகுதியில் திமுக தவிர மற்றுமுள்ள அனைத்து ஓட்டுகளும் நடிகை குஷ்புவிற்கே வரும் எனவும் கட்சி நிர்வாகிகள் சார்பில் கணிக்கப்பட்டு உள்ளது.

மேலும் திமுக சார்பில் தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பேசிய அக்கட்சியின் முன்னாள் எம்.பி. ஆ.ராசா தமிழக முதல்வர் குறித்து இழிவாக பேசிவிட்டார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் நடிகை குஷ்புவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் வாக்குச் சேகரிப்பின்போது நடிகை குஷ்பு பொதுமக்களோடு அன்பாகப் பழகுவது, டீ போட்டு தருவது, உணவகத்தில் தோசை ஊற்றுவது மேலும் பெண்களோடு அக்கறையாக உரையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் நடிகை குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆதரவு பெருகி இருப்பதாக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பிலும் கருத்துக் கூறப்படுகிறது. மேலும் நடிகை குஷ்பு சீக்கிய குருத்வாரா கோயிலுக்குள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுவும் மதநல்லிணக்கம் கொண்ட ஒரு செய்கையாகப் பார்க்கப்படுகிறது எனக் பாஜக சார்பில் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.